
கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான நிலையில் அடையாளம் காணப்பட்ட பொலனறுவையைச் சேர்ந்த முதலாவது கடற்படை சிப்பாய் உட்பட மேலும் 05 கடற்படையினர் குணமடைந்து இன்று வைத்தியசாலையிலிருந்து வெளிறினர்.
கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானதாக அடையாளம் காணப்பட்ட முதலாவது கடற்படை சிப்பாய் உள்ளிட்ட கடற்படையினர் 05 பேரும் வெலிசறை கடற்படை முகாமில் பணியாற்றியவர்களாவர்.
தொற்றுக்குள்ளான முதலாவது கடற்படை சிப்பாய் விடுமுறையில் இருந்தபோது, காய்ச்சல் காரணமாக பொலனறுவை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டதோடு, அங்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையின் மூலம் அவர் கொரோனாத் தொற்றுக்குள்ளானார் என்று அடையாளம் காணப்பட்டதைத் தொடர்ந்து, மேலதிக சிகிச்சைக்காக வெலிக்கந்தை ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.
ஏனைய கடற்படையினர் 04 பேருக்கும் கொரோனாத் தொற்று அடையாளம் காணப்பட்ட நிலையில், சிகிச்சைக்காக ஹோமாகம ஆதார வைத்தியசாலை மற்றும் கொழும்பு தேசிய தொற்று நோயியல் வைத்தியசாலை ஆகியவற்றில் சேர்க்கப்பட்டனர்.
குறித்த வைத்தியசாலைகளில் அவர்கள் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவ்வப்போது மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையின் முடிவுகளுக்கு அமைய, குறித்த வைரஸ் அவர்களது உடம்பில் இருந்து முற்றாக நீங்கிவிட்டது என்று உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து அவர்கள் வைத்தியசாலைகளிலிருந்து வெளியேறியுள்ளனர் என்று கடற்படை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இதற்கமைய, இக்கடற்படையினர் 05 பேர் உட்பட, கொரோனா வைரஸினால் பீடிக்கப்பட்டு வைத்தியசாலைகளில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 21 பேர் இதுவரையில் குணமடைந்து வைத்தியசாலைகளிலிருந்து வெளியேறியுள்ள போதிலும், அவர்கள் அனைவரையும் சுகாதார ஆலோசனைகளுக்கு அமைய 14 நாட்களுக்குத் தனிமைப்படுத்த கடற்படையினரால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.