3000 வீடுகளை அமைக்கும் வேலைத்திட்டம் இன்று ஆரம்பம்

மூவாயிரம் வீடுகளை நிர்மாணிக்கும் அரசாங்கத்தின் தேசிய வேலைத்திட்டம், இன்று கொழும்பு – ஒருகொடவத்தையில் ஆரம்பிக்கப்படவுள்ளது.

நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சு நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

அரசாங்கத்தின் தொலைதூர நோக்கு கொள்கையின் பிரகாரம், நடுத்தர குடும்பங்களுக்கு ஐயாயிரம் வீடுகளை நிர்மாணிக்க உத்தேசிக்கப்பட்டுள்ள நிலையில், அதன் முதற்கட்டமாக மூவாயிரம் வீடுகளை நிர்மாணிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையிலேயே, அதன் முதற்கட்ட நடவடிக்கை இன்றைய தினம் ஒருகொடவத்தையில் ஆரம்பித்துவைக்கப்படவுள்ளது.

இதற்கமைய, குறித்த வீட்டுத் திட்டத் தொகுதிகளை, உரிய தரத்திலும், கவர்ச்சிகரமாகவும் நிர்மாணிக்குமாறு, விடயத்திற்குப் பொறுப்பான அமைச்சர் என்ற வகையில், பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ உரிய அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் விடுத்துள்ளார்.

அரசாங்கத்தின் தொலைதூர நோக்கு கொள்கையின் ஊடாக, குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் பெறும் குடும்பத்தினருக்கு, வீடுகளை நிர்மாணிக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், அதன் முதற்கட்டமாக, மூவாயிரம் நடுத்தர குடும்பத்தினருக்கு, குறித்த வீடுகளை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இதன்படி, குறித்த வீடுகள், கொழும்பு, கம்பஹா மற்றும் கண்டி ஆகிய மாவட்டங்களில் நிர்மாணிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படும் குறித்த வீடமைப்புத் திட்டத்திற்கு, 40 பில்லியன் ரூபா நிதி செலவாகும் என நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

You May Also Like

About the Author: kalaikkathir