கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடல்கள் விவகாரத்தை ஐநாவிடம் கொண்டு செல்வதற்கு முயற்சி

கொரோனா வைரசினால் உயிரிழந்தவர்களின் உடல்களை தகனம் செய்யவேண்டியது கட்டாயம் என்ற அரசாங்கத்தின் கொள்கை குறித்து ஐக்கிய நாடுகளின் மனித உரிமை குழுவிடம் முறையிடுவது குறித்து ஆராய்ந்து வருவதாக பாதிக்கப்பட்டவர்களும் மனித உரிமை செயற்பாட்டாளர்களும் தெரிவித்துள்ளனர்.

உள்நாட்டில் இந்த விவகாரத்திற்கு நியாயத்தை பெறுவதற்கான வாய்ப்பில்லை என தாங்கள் கருதுவதன் காரணமாகவே ஐநாவை நாடுவதற்கு தீர்மானித்துள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான சர்வதேச உடன்படிக்கையை அரசாங்கங்கள் நடைமுறைப்படுத்துவதை கண்காணிக்கும் ஐக்கிய நாடுகள் மனித உரிமை குழுவிடம் இது குறித்து முறைப்பாடு செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக மனித உரிமை செயற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள மனித உரிமை செயற்பாட்டாளர் சீறீன் அப்துல் ஷரூர் முஸ்லீம் சமூகம் சர்வதேச அளவில் தீர்வை தேடவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

நாங்கள் நீதிமன்றத்திடம் சென்றுள்ளோம், நாங்கள் நாடாளுமன்றத்திடம் சென்றுள்ளோம்,நாங்கள் ஜனாதிபதிக்கு எழுதியுள்ளோம் நாங்கள் பிரதமருக்கு எழுதியுள்ளோம் சர்வதேச சமூகத்தின் சில தரப்பினருக்கும் எழுதியுள்ளோம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த விடயத்தில் உள்நாட்டில் இனிமேலும் எதனையும் செய்ய முடியாது என குறிப்பிட்டுள்ள அவர் கொரோனா வைரஸ் காரணமாக எங்களால் ஜெனீவாவிற்கு செல்ல முடியாது இதன் காரணமாக இலங்கைக்கு வெளியே உள்ளவர்கள் நடவடிக்கை எடுப்பதற்கான அழுத்தங்களை கொடுக்கவேண்டும் என தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கு ஆதரவாகயிருந்த இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பும் இந்த விடயத்தில் அரசாங்கத்திற்கு எதிராகவுள்ளது என குறிப்பிட்டுள்ள அவர் இலங்கை அரசாங்கத்தின் தீர்மானமே இதற்கு காரணம் என தெரிவித்துள்ளார்.
சர்வதேச நடவடிக்கைகள் குறித்து ஆராய்ந்து வருகின்றோம் என தெரிவித்துள்ள மனித உரிமை செயற்பாட்டாளர் சீறீன் அப்துல் ஷரூர் யுத்தத்தின் இறுதி கட்டத்தில் இழைக்கப்பட்ட அநீதிகளிற்காக இலங்கை ஏற்கனவே சர்வதேச அழுத்தத்தை எதிர்கொண்டுள்ளதையும் சுட்டிக்காட்டியுள்ளார்.

You May Also Like

About the Author: kalaikkathir