யாழில் மதுபானம் என நினைத்து திரவத்தை குடித்த இளைஞர் உயிரிழப்பு!

யாழ்ப்பாணம், நாவற்குழி 300 வீட்டுத் திட்டப் பகுதியில் புதன்கிழமை மதுபானம் என நினைத்து ரின்னரை குடித்த இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

குறித்தப் பகுதியைச் சேர்ந்த கணபதிப்பிள்ளை ஜனாதீபன் (வயது-36 ) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக சாவகச்சேரி காவற்துறையினர் தெரிவித்தனர்.

வீட்டில் வர்ணப்பூச்சு வேலை இடம்பெற்றுள்ளது. அதற்காக கால் போத்தல் சாராயப் போத்தலில் ரின்னர் விட்டு வைக்கப்பட்டிருந்துள்ளது.

போத்தலில் ரின்னர் இருப்பது தெரியாததால் சாராயம் என நினைத்து சம்பவதினமாக புதன்கிழமை காலை 9 மணியளவில் இளைஞர் அதனைக் குடித்துள்ளார். அவர் மதுபானம் அருந்திவிட்டு மயக்கநிலையில் உள்ளார் என வீட்டில் உள்ளவர்கள் நினைத்துள்ளனர்.

எனினும் பிற்பகல் 2 மணியளவில் அவர் மயக்கமுற்று இருப்பதையறிந்த உறவினர்கள், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அவரை அனுமதித்துள்ளனர்.

எனினும் ஒருமணி நேர சிகிச்சையின் பின் சிகிச்சை பயனின்றி அவர் உயிரிழந்துள்ளார்.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை திடீர் இறப்பு விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் விசாரணைகளை மேற்கொண்டார்.

உடற்கூற்றுப் பரிசோதனையின் பின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

You May Also Like

About the Author: kalaikkathir