மன்னாரில் மர்மகுழு அட்டகாசம்! இரவில் நடந்த பயங்கரம்

மன்னார் பிரதேசச் செயலாளர் பிரிவில் உள்ள சாவக்கட்டு கிராமத்திற்குள் நேற்றிரவு புகுந்த இளைஞர்கள் அங்குள்ளவர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.

குறித்த கிராமத்தில் உள்ள வீடுகளினுள் அத்துமீறி நுழைந்த கும்பல் ஆண்கள், பெண்கள், வயோதிபர்கள் என அனைவர் மீதும் தாக்குதல் நடத்திய நிலையில், தமக்குப் பாதுகாப்பு வழங்கக் கோரி நேற்று இரவு 8 மணியளவில் மன்னார் மாவட்ட நீதவானின் வாசஸ்தலத்திற்கு முன்னால் மக்கள் ஒன்று கூடி போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.

சாவக்கட்டு கிராமத்திற்குள் நேற்று இரவு சுமார் 10இற்கும் மேற்பட்ட மோட்டார் சைக்கிளில் முகக்கவசம் மற்றும் தலைக்கவசம் அணிந்து கூரிய ஆயுதங்களுடன் சென்ற இளைஞர் குழு குறித்த கிராமத்தில் உள்ள வீடுகளுக்குள் சென்று ஆண்கள், பெண்கள், வயோதிபர்கள் என அனைவர் மீதும் சரமாரியாகத் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

குறித்த தாக்குதல் சம்பவங்களின் போது பெண் உட்பட இருவர் காயமடைந்து மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

இந்த நிலையில் அச்சமடைந்த குறித்த கிராம மக்கள் ஒன்று சேர்ந்து நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு 8 மணியளவில் மன்னார் மாவட்ட நீதவானின் வாசஸ்தலத்திற்குமுன் ஒன்று கூடி போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.

தமக்கு உரிய பாதுகாப்பை வழங்குமாறும், குறித்த நபர்களைக் கைது செய்யுமாறும் கோரிக்கை விடுத்தனர். இதனால் குறித்த வீதியூடான போக்குவரத்து சிறிது நேரம் பாதிக்கப்பட்டது.

சம்பவ இடத்திற்கு வந்த மன்னார் பொலிஸார் மக்களுடன் பேச்சுவார்த்தை மேற்கொண்டு மன்னார் பொலிஸ் நிலையத்திற்குச் சென்று முறைப்பாட்டைப் பதிவு செய்யுமாறு கோரியிருந்தனர்.

இந்த நிலையில் அந்த மக்கள் மன்னார் பொலிஸ் நிலையத்திற்குச் சென்று முறைப்பாட்டை மேற்கொண்டனர்.

அண்மையில் இளைஞர் குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதலை தொடர்ந்து பொலிஸார் சிலரைக் கைது செய்து பிணையில் விடுவித்துள்ளனர்.

இந்த நிலையிலே குறித்த இளைஞர் குழு நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு சாவட்கட்டு கிராமத்திற்குள் சென்று தாக்குதலை மேற்கொண்டுள்ளதாகத் தெரிய வருகின்றது. மேலதிக விசாரணைகளை மன்னார் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

You May Also Like

About the Author: kalaikkathir