தனி இராச்சியம் அமைக்க முயற்சிப்பார்களாயின் உடனடி கைது

அரசாங்கத்திற்கு எதிராக புரட்சி செய்வார்களாயின், தனி இராச்சியம் அமைக்க முயற்சிப்பார்களாயின் அத்தகைய நபர்களை கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்த வேண்டிய பொறுப்பு காவல்துறையினருக்கு உள்ளது என காவல்துறை ஊடகப் பேச்சாளர் பிரதி காவல்துறை மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளவர்களை விடுதலை செய்யுமாறு கோரி கிளிநொச்சியில் நேற்று ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

இந்த நிலையில், இது தொடர்பாக இன்று (02) கருத்து வெளியிடும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

காவல்துறையயினரால் ஏற்கனவே கைது செய்யப்பட்டிருக்கும் தமது உறவினர்களை உடனடியாக விடுவிக்குமாறு கோரி கிளிநொச்சி – ஏ9 வீதியில் நேற்று 23 பேர் ஆர்ப்பாட்டமொன்றில் ஈடுபட்டதாக தெரிவித்துள்ள அவர், அவர்களால் விடுதலை செய்யப்பட வேண்டும் என கோருபவர்கள் காவல்துறை பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் என்றும் விடுதலை புலிகள் இயக்கத்தை மீள உருவாக்க முயன்ற குற்றத்திற்காகவே அவர்கள் கைது செய்யப்பட்டதாகவும் காவல்துறை ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.

அத்துடன் கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து வெடிபொருட்கள் மற்றும் டெட்டனேட்டர் உள்ளிட்டவையும் கைப்பற்றப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார்.

மேலும் காரணமின்றி அவர்கள் கைது செய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகின்ற கூற்று முற்றிலும் உண்மைக்கு புறம்பானது எனவும் காவல்துறை ஊடகப் பேச்சாளர், பிரதி காவல்துறை மா அதிபர் தெரிவித்தார்.

You May Also Like

About the Author: kalaikkathir