ரணில் விக்கிரமசிங்கவுக்கும் சஜித் பிரேமதாஸவுக்கும் இடையில் திடீர் சந்திப்பு

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் எதிர்க்கட்சித் தலைவரான ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாஸவுக்கும் இடையில் திடீர் சந்திப்பு நடைபெற்றுள்ளது என அரசியல் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தச் சந்திப்பின்போது அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பான விசாரணைகளை நடத்திய ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை சம்பந்தமாக இருவரும் விரிவாக கலந்துரையாடியுள்ளதுடன் கருத்துக்களை பரிமாறிக்கொண்டுள்ளனர் எனவும் அரசியல் தரப்புத் தகவல்கள் கூறுகின்றன.

இதனடிப்படையில் ஆணைக்குழுவின் அறிக்கைக்கு எதிராகச் செயற்படவும், இதற்காக ஏனைய எதிர்க்கட்சி அரசியல் சக்திகளை இணைத்துக்கொள்வது சம்பந்தமாகவும் இணக்கப்பாடு ஏற்படுத்திக்கொள்ளப்பட்டுள்ளது.

இரண்டு தலைவர்களுக்கும் இடையிலான இந்தப் பேச்சுவார்த்தை கடந்த புதன்கிழமை தனிப்பட்ட இடமொன்றில் நடைபெற்றுள்ளதுடன் சுமுகமான முறையில் இந்தச் சந்திப்பு நடத்தது எனவும் எதிர்க்கட்சித் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நாடாளுமன்றத் தேர்தல் தோல்விக்கு பின்னர் இந்த இரண்டு தலைவர்களும் இரண்டு, மூன்று முறை தனிப்பட்ட ரீதியில் சந்தித்துள்ளனர் என்று கூறப்படுகின்றது. இந்தநிலையில், ஆணைக்குழுவின் அறிக்கை சம்பந்தமாக இந்தத் திடீர் சந்திப்பு நடந்துள்ளது.

You May Also Like

About the Author: kalaikkathir