பொலிஸ் என கூறி பண மோசடியில் ஈடுபட்ட ஐவர் கைது!

காவல்துறை அதிகாரிகள் குழுவினர் எனத் தெரிவித்து, பலப்பிட்டி – பாதேகம யோகாஷ்ரம விகாராதிபதியிடம் 10 இலட்சம் ரூபாவை கப்பமாக கோரிய சம்பவம் தொடர்பில், காவல்துறைநிலைய பொறுப்பதிகாரி ஒருவரும், பிரதேச சபை உறுப்பினர் ஒருவரும் உட்பட 5 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கைதுசெய்யப்பட்ட காவல்துறை நிலைய பொறுப்பதிகாரி, நோர்வூட் காவல்துறை நிலையத்தின் போக்குவரத்து பிரிவின் பொறுப்பதிகாரியாக கடமையாற்றுபவர் என காவல்துறை தெரிவித்துள்ளது.

நேற்று முன்தினம் இரவு, குறித்த விகாரைக்கு சென்ற அவர்கள், விகாராதிபதி போதைப்பொருள் வர்த்தகத்துடன் தொடர்புபட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது எனத் தெரிவித்துள்ளதுடன், அது தொடர்பான விசாரணைகளை நிறுத்துவதற்கு கப்பம் கோரியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவ்வாறில்லாவிட்டால் தங்களை காவல்துறை நிலையத்திற்கு அழைத்துச் செல்லவேண்டி ஏற்படும் என விகாராதிபதியிடம் அந்தக் குழுவினர் கூறியுள்ளனர்.

இவ்வாறான நிலையில், குறித்த சந்தர்ப்பத்தில் விகாரையில் இருந்த மற்றுமொரு நபர், சம்பவம் தொடர்பில் காவல்துறைக்கு தகவல் வழங்கியுள்ளார்.

இதையடுத்து, காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்ற நிலையில், குறித்த தரப்பினர் அங்கிருந்து தப்பிச்சென்றுள்ளனர்.

சம்பவம் குறித்து காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணைகளில், பலப்பிட்டிய பகுதியில் உள்ள வீடொன்றில் மறைந்திருந்த நிலையில், அவர்கள் நேற்று கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

You May Also Like

About the Author: kalaikkathir