நடேசன் – பிரியா தம்பதிகளுக்கு இணைப்பு வீசா

அவுஸ்ரேலியாவில் நிர்கதியாகியுள்ள இலங்கையைச் சேர்ந்த நடேசன் – பிரியா தம்பதிகளுக்கு அந்நாட்டின் இணைப்பு வீசா வழங்கப்பட்டுள்ளது.

அந்நாட்டின் குடிவரவுத்துறை அமைச்சர் அலெக்ஸ் ஹவ்க் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

அவுஸ்ரேலியாவின் குயின்ஸ்லேண்ட் – பிலோயிலா (BILOELA) நகரில் வசித்து வந்த இவர்களை, வீசா காலம் நிறைவடைந்த நிலையில் 2018ம் ஆண்டு இலங்கைக்கு நாடு கடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது.

எனினும் அதற்கு எதிராக எடுக்கப்பட்ட சட்ட நடவடிக்கைகளின் நிமித்தம் வழக்கு விசாரணை வரையில் கிறிஸ்மஸ் தீவில் உள்ள ஏதிலிகள் முகாமில் தங்க வைக்கப்பட்டனர்.

இந்நிலையில் அவர்களது இளைய மகள் சுகவீனமற்று பேர்த் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

எனவே பிரியா – நடேஸ் குடும்பத்தின் 4 பேரும் 3 மாதங்களுக்கு பேர்த் நகரில் தங்கி இருப்பதற்கான இணைப்பு வீசா வழங்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வீசாவின் மூலம் சுகாதாரம், வீடு, தொழில் வசதிகள் அவர்களுக்கு வழங்கப்படும்.

எனினும் அவர்களது வீசா உரிமை தொடர்பான நிலைப்பாட்டில் இன்னும் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.

அவர்கள் அங்கிருந்த படி வழக்கு நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியும் என்று அவுஸ்திரேலிய குடிவரவுத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

You May Also Like

About the Author: kalaikkathir