தென் ஆபிரிக்காவில் ஊரடங்கு உத்தரவு திடீர் ரத்து

தென் ஆபிரிக்காவில் கண்டறியப்பட்ட ஒமைக்ரொன் வைரஸ் திரிபு உச்சம் தொட்ட நிலையில் அந்நாட்டில் 2 ஆண்டுகளுக்கு முன்னர் அமுல்படுத்தப்பட்ட ஊரடங்கு உத்தரவு நேற்றுமுன்தினம்(30) ஒரே நாளில் ரத்து செய்யப்பட்டுள்ளது.

தேசிய கொரோனா வைரஸ் கட்டளை சபை மற்றும் அந்நாட்டு அதிபரின் ஒருங்கிணைப்பு சபை கூட்டங்களைத் தொடர்ந்து, ஊரடங்கை நீக்கும் உத்தரவை அந்நாட்டு அதிபர் பிறப்பித்துள்ளார்.

ஊரடங்கு சட்டம் நீக்கப்பட்டதையடுத்து மக்கள் நடமாடும் நேரத்துக்கு எந்தக் கட்டுப்பாடுகளும் இருக்காது என கூறப்பட்டுள்ளது.

பொது நிகழ்வுகளில் பங்கேற்போர் எண்ணிக்கையும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

உள்ளரங்குகளில் 1,000 பேரும், திறந்தவெளிகளில் 2,000 பேரும் கூடலாம். இந்த உத்தரவை பல தரப்பினரும் வரவேற்றுள்ளனர்.

இரவு 11 மணிக்கு மேலும் மது பானங்கள் பரிமாறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளதை சுற்றுலா விடுதி துறையினர் மகிழ்வுடன் வரவேற்றுள்ளனர். அடுத்த 15 நாளில் பாடசாலைகள் திறக்க உள்ள நிலையில், பெற்றோர் இந்த ஊரடங்கு ரத்து உத்தரவால் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

You May Also Like

About the Author: kalaikkathir