
வரலாற்று சிறப்புமிக்க குருநாகல் புவனேகபாகு மன்னரின் அரசவை தகர்க்கப்பட்டமை குறித்து குருநாகல் நீதவான் நீதிமன்றிற்கு தகவல் வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அதில் நகர அபிவிருத்தி அதிகாரசபை மற்றும் வீதி அபிவிருத்தி அதிகார சபைக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த விடயம் தொடர்பாக குருநாகல் பொலிஸ் நிலையத்தில் ஏற்கனவே முறைப்பாடுகள் வழங்கப்பட்டிருந்த போதிலும் இது தொடர்பாக அவர்கள் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.
இதனையடுத்து, குருநாகல் பொலிஸார் நடவடிக்கை மேற்கொள்ளப்படாமை தொடர்பாக விரிவான விசாரணைகளை முன்னெடுக்கவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஜாலிய சேனாரத்ன தெரிவித்தார்.
குறித்த கட்டம் தொடர்பாக வழங்கப்பட்ட முதலாவது முறைப்பாட்டிலிருந்து அது தகர்க்கப்பட்ட தினம் வரையிலான அனைத்து தரவுகளையும் பெற்று இது விடயம் தொடர்பிலான அறிக்கையொன்றை தயாரிக்கவுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் குறிப்பிட்டார்.
முதற்தடவையாக குருநாகலை இராசதானியாக்கிக் கொண்ட இரண்டாவது புவனேகபாகு மன்னர், பலகையால் உருவாக்கப்பட்ட மேடையில் தமது அரசவையை நடத்தியிருந்தார்.
குருநாகல் நகர மத்தியிலுள்ள இந்த அரசவையின் பாதுகாப்பிற்காக பின்னர் ஒரு கட்டடம் நிர்மாணிக்கப்பட்டது. இந்த அரசவையும் அதன் பாதுகாப்பிற்காக அமைக்கப்பட்ட கட்டடமும் தொல்பொருள் சின்னங்களாக தொல்பொருள் திணைக்களத்தின் மேற்பார்வையில் இருந்தன.
சிறிது காலமாக குருநாகல் மாநகர சபை இந்த கட்டடத்திற்குள் ஹோட்டல் ஒன்றை நடத்திச் சென்றுள்ளது. இந்த நிலையில், குறித்த கட்டடத்தின் ஒரு பகுதி கடந்த செவ்வாய்க்கிழமை தகர்க்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.