சிரேஷ்ட சட்டத்தரணி ந.சிறீகாந்தா அழைப்பு
வட்டுகோட்டைப் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்ட இளைஞர் சித்திரவதைக்கு உள்ளாகி உயிரிழந்தார் என்று கூறப்படும் சம்பவம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், பாதிக்கப்பட்டவருக்கு நீதிகோரி இந்த வழக்கில் 35க்கும் மேற்பட்ட சட்டத்தரணிகள் முன்னிலையாகத் தீர்மானித்துள்ளனர்.
இது தொடர்பாக நேற்று பிற்பகல் கருத்துத் தெரிவித்த சிரேஷ்ட சட்டத்தரணி ந.சிறீகாந்தா, இளைஞனின் மரணம் கொலை என்பது தெட்டத் தெளிவானது. இந்த வழக்கு நடவடிக்கையில் யாழ்ப்பாண மாவட்டத்திலுள்ள அனைத்துச் சட்டத்தரணிகளும் இணைந்து கொள்ள வேண்டும். பிரதானமாக குற்றவியல் வழக்குகளில் அனுபவம் வாய்ந்தவர்களும் இணைந்துகொள்ள வேண்டும், என்று அழைப்பு விடுத்தார்.
நாளைய (24) தினம் வழக்கு நடைபெறவிருக்கின்றது. அன்று அவரது உடற்கூற்றுப் பரிசோதனை அறிக்கை நீதிமன்றில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. தொடர்ச்சியான சித்திரவதையால்தான் இளைஞர் மரணமடைந்துள்ளார்.
இந்தக் கொலை தொடர்பாக உரிய சட்ட நடவடிக்கை பொலிஸ் தரப்பில் விரைவாக எடுக்க வேண்டும். அனைத்து விடயங்களும் நீதிமன்றத்துக்கு வரவேண்டும். இந்தக் கொலைக்குக் காரணமான அனைவரும் நீதிமன்றில் உடனடியாக முற்படுத்தப்பட வேண்டும்.
இந்த நோக்கத்துடன் யாழ்ப்பாணம் நீதிமன்றில் விண்ணங்களை முன்வைப்போம்.
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் உள்ள சட்டத்தரணிகள் அனைவரும் இந்த நடவடிக்கையில் இணைந்துகொள்ள வேண்டும். பொலிஸ் காவலில் மரணம் என்பது சட்டத்தின் ஆட்சிக்கே விடுக்கப்பட்ட பகிரங்கச் சவால். அதை நாம் எதிர்கொள்வோம், என்றும் அவர் தெரிவித்தார். (01)
