சிங்கள இளையோர்களே, நினைவேந்தும் உரித்தை நிலைநாட்டதுணைசெய்யுங்கள்!

நாடாளுமன்றில் சிறீதரன் எம்.பி கோரிக்கை

ஈழத்தமிழர்களின் நெடுங்கால மரபுகளின்வழி இம்முறையும், இனிவரும் காலங்களிலும் எமது உறவுகள் புதைக்கப்பட்ட இடங்களுக்குச் சென்று விளக்கேற்றி, மலர்தூவி, கண்ணீர் சிந்தி, வழிபடுவதன் மூலம் எங்களை நாங்களே ஆற்றுப்படுத்திக் கொள்கின்ற நினைவேந்தல் நிகழ்வுகளை, இராணுவத் தலையீடுகளோ, பொலிசாரின் அச்சுறுத்தல்களோ அற்று அமைதியான வழியில் கடைப்பிடிப்பதற்கு வழிவகை செய்வதன் மூலம் இந்த நாட்டில் இன நல்லிணக்கத்தை ஏற்படுத்த முன்வாருங்கள், என்று சிங்கள இளையோரை முன்னிறுத்தி நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் கோரிக்கை விடுத்துள்ளார்.

இன்றையதினம் நடைபெற்ற நாடாளுமன்ற அமர்வில் கலந்துகொண்ட அவர், தமிழ்த்தேசிய மாவீரர் நாள் நெருங்கியிருக்கும் இந்தக் காலப்பகுதியில் வடக்கு, கிழக்கு தமிழர் தாயகப் பிரதேசங்களில் அதிகரிக்கப்பட்டிருக்கும் இராணுவக் கெடுபிடிகள் குறித்து உரையாற்றும்போதே மேற்கண்டவாறு தெரிவித்திருந்தார்.

2015 ஆம் ஆண்டு ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் கொண்டுவரப்பட்ட நிலைமாறுகால நீதிப் பொறிமுறையை இலங்கை அரசு ஏற்றுக்கொண்டதற்கமைய, ஈழத்தமிழர்கள், இனவிடுதலைக்காக உயிர்துறந்த தமது பிள்ளைகள் விதைக்கப்பட்ட விளைநிலங்களான துயிலும் இல்லங்களுக்குச் சென்று நினைவேந்தும் உரிமையை நிலைநிறுத்தத் தொடங்கியிருந்தார்கள்.

ஆனால், தமது உறவுகளை இழந்து துயருறுகின்ற நெஞ்சம் எவ்வாறு இருக்கும் என்பதை உணரத் தலைப்படாத அதிகாரக் கரங்கள், அடிப்படை மனிதாபிமான உணர்வுகளைக் கூடப் புறந்தள்ளி, இன்னுமின்னும் எங்கள் மக்களை வஞ்சிக்கும் செயற்பாட்டையே மிகக் கச்சிதமாக மேற்கொண்டு வருகின்றன.

இனி ஒருபோதும் போரொன்றை விரும்பாத எமது மக்கள், பயங்கரவாதம் எனப்படுகின்ற இயல்புகளுக்கு ஒத்திசையாத வகையில் தங்களின் பிள்ளைகளை, அவர்கள் புதைக்கப்பட்ட நிலங்களில் சென்று வழிபடுவதற்கும், விளக்கேற்றுவதற்கும், கண்ணீர்விட்டு அழுவதற்குமான சந்தர்ப்பங்களைத் தடுக்கும் வகையில் அச்சுறுத்தல்களும் விசாரணைகளும் பரவலாக அரங்கேற்றப்படுகின்றன.

போர் முடிவுற்று பதின்மூன்று ஆண்டுகள் நிரம்பிய பின்னரும், வடக்கு, கிழக்கிலுள்ள 27 மாவீரர் துயிலும் இல்லங்களில், யாழ்ப்பாண மாவட்டத்தின் கொடிகாமம், எள்ளங்குளம், கோப்பாய் ஆகிய துயிலும் இல்லங்கள், கிளிநொச்சி மாவட்டத்தின் தேராவில் துயிலும் இல்லம், முல்லைத்தீவு மாவட்டத்தின் முள்ளியவளை, ஆலங்குளம், அளம்பில், நெடுங்கேணி களிக்காடு, மற்றும் மணலாறிலுள்ள உதயபீடம், கோடாலிக்கல் புனிதபூமி ஆகிய துயிலும் இல்லங்கள், வவுனியா ஈச்சங்குளம் துயிலும் இல்லம், மட்டக்களப்பு தாண்டியடி துயிலும் இல்லம் ஆகிய பன்னிரண்டு மாவீரர் துயிலும் இல்லங்கள் இன்றுவரை இராணுவப் படை முகாம்களாக முற்றுகையிடப்பட்டுள்ளன.

கிளிநொச்சி மாவட்டத்தின் தேராவில் துயிலும் இல்லத்தை விடுவிக்கக் கோரி கடந்த 2023.11.11 ஆம் திகதி பொதுமக்கள் மற்றும் சிவில் சமூக அமைப்புகளின் ஏற்பாட்டில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றும் மேற்கொள்ளப்பட்டிருந்தது.

இவ்வாறானதொரு சூழலில், தமது பிள்ளைகளின் கல்லறைகள் அத்தனையும் போரியல் மாண்புக்குப் புறம்பான வகையில் இடித்தும், பெயர்த்தும் அழிக்கப்பட்ட பின்னரும், அந்தக் கல்லறைகள் நிறைந்திருந்த துயிலும் இல்லங்களைத் தமது புனித பூமியாக எண்ணியே தமிழர்கள் இன்றளவும் பூசிக்கிறார்கள்.

திரும்பும் திசையெல்லாம் ஆக்கிரமிப்பின் கால்கள் ஆழ வேரூன்றிப் போயிருக்கும் தமிழர் தாயகத்தில், இராணுவத்தால் விடுவிக்கப்பட்ட துயிலும் இல்லங்கள் மீதான ஆக்கிரமிப்பும், வழிபாட்டுரிமை மீதான தடையும் மீளவும் வலிந்து ஏற்படுத்தப்படக்கூடும் என்ற அடிப்படையில், மக்களிடையே ஆழப்பதிந்திருக்கும் அரசு மீதான நம்பிக்கையீனமும், துயிலும் இல்லத்தின் புனிதத்துவத்தைப் பாதுகாக்க வேண்டுமென்பதில் அவர்களுக்கிருக்கும் ஆத்ம எதிர்பார்ப்பும், அத்துயிலும் இல்ல வளாகங்களை எல்லைப்படுத்துவதிலும் அலங்கரிப்பதிலும் ஆர்வத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

அத்தகைய மக்களின் எதிர்பார்ப்புக்கு அமைய, காலத்தின் தேவை கருதியும் துயிலும் இல்ல மரபுகளுக்கமையவும் கனகபுரம், முழங்காவில், வன்னிவிளாங்குளம் ஆகிய மூன்று துயிலும் இல்லங்களினதும் நுழைவாயில் முகப்புகளை, அரை நிரந்தரமானவையாக நிறுவியிருக்கிறோம்.

எமக்கெதிராக அரசு பூசமுற்படுகின்ற பயங்கரவாத முலாம் குறித்த எந்தக் குறியீடுகளும் அவற்றில் காட்சிப்படுத்தப்படவில்லை. ஆனால், போரை நினைவுபடுத்துகின்ற, நல்லிணக்கத்தைச் சீர்குலைக்கின்ற எந்தவொரு அடையாளங்களும் இல்லாத வெற்று முகப்புகளை நிறுவியமைக்காக, இதுவரை நான் உட்பட பதின்மூன்று பேர் பொலிசாரால் தனித்தனியே விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளோம்.

தமிழர்களின் பூர்வீக மண்ணை ஆக்கிரமித்து, நூறு வீதம் தமிழ் மக்களின் புழக்கம் செறிவாக உள்ள தமிழர் தாயகப் பகுதிகளின் பெருநகரங்களிலும், பிரதான வீதிகளிலும் ஏராளமான போர் வெற்றிச் சின்னங்கள் நிரந்தரமாக நிறுவப்பட்டுள்ளன.

குறிப்பாக கிளிநொச்சி நகர மத்தியில், டிப்போச்சந்திக்கும் கிளிநொச்சி மத்திய மகா வித்தியாலயத்துக்கும் அருகேயுள்ள சந்திரன் பூங்கா வளாகத்தில், தமிழர்களின் இதயங்களைத் துளைத்து உள்நுழைவதான தோற்றப்பாட்டை வெளிப்படுத்தும், துப்பாக்கிச் சன்னம் ஒன்றுடனான போர் வெற்றிச் சின்னமும், ஆனையிறவுப் பகுதியில் ஏ9 பிரதான வீதியின் இருமருங்கும், இருவேறு போர் வெற்றிச் சின்னங்கள் நிறுவப்பட்டுள்ளன.

இலங்கையைத் தாங்கி நிற்கும் வலிந்த கரங்கள் ஒருபுறமும், இராணுவச் சிப்பாய் ஒருவரின் இராணுவச் சீருடையுடனான உருவச்சிலை ஒருபுறமும் நிறுவப்பட்டுள்ளன.

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்புப் பிரதேசத்தில் ஏ35 பிரதான வீதியின் ஒருமருங்கில், ஆயுதம் தரித்த இராணுவச் சீருடை, சிங்கக்கொடி, துப்பாக்கி என்பவற்றை ஏந்தியவாறு வெற்றிக்களிப்பில் மிதக்கும் இராணுவச் சிப்பாய் ஒருவரது உருவச்சிலை நிறுவப்பட்டிருக்கிறது.

அடிப்படை உரித்துக்கோரிப் போராடிய ஓர் இனத்தைத் தோற்கடித்துவிட்டோம் என்கிற மமதையையும், போரின் குரூரத்தையும், படையினரது ஆக்கிரமிப்புச் சிந்தையையும் முகத்திலறைந்தாற் போல் பிரதிபலிக்கும் ஆயுத கலாசார நினைவுச்சின்னங்கள் சீர்குலைக்காத இன நல்லிணக்கத்தை, அவை நினைவுபடுத்தாத போரியல் உணர்வுகளை, நினைவேந்தல் உரித்தை நிலைநாட்டுவதற்காக அமைத்த துயிலும் இல்ல முகப்புகள் சீர்குலைக்கும் என்று சிந்திப்பது கூட ஆக்கிரமிப்பின் அதியுச்ச வெளிப்பாடாகவே தென்படுகிறது, என்று நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் தனது உரையில் குறிப்பிட்டார்.

இதன்போது, தேராவில் துயிலும் இல்ல விடுவிப்புத் தொடர்பான ஆர்ப்பாட்டத்தின்போது கையளிக்கப்பட்ட மகஜரின் பிரதியும், புதிதாக நிறுவப்பட்டுள்ள துயிலும் இல்ல முகப்பின் நிழற்படமும், கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களிலுள்ள இராணுவ நினைவுச் சின்னங்களின் புகைப்படங்களும் சபாபீடத்திற்குச் சமர்ப்பிக்கப்பட்டதோடு நாடாளுமன்றிலும் காட்சிப்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது. (02)

You May Also Like

About the Author: digital

Leave a Reply