வடக்கு,கிழக்கு பிரதிநிதிகளுடன் ஜனாதிபதி சந்திப்பை நடத்துவதானது காலத்தை இழுத்தடிப்பதற்கும், உலகத்தை ஏமாற்றுவதற்கும் பயன்படுத்தப்படும் ஒரு தந்திரோபாயம் என்று இலங்கை தமிழரசுக்கட்சியின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்தார்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வடக்கு,கிழக்கு பிரதிநிதிகளுடன் நடத்திய சந்திப்பு தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடனான சந்திப்பானது எந்தவொரு நிகழ்ச்சி நிரலையும் கொண்டதாக இல்லை. அது வெறுமனே காலத்தை இழுத்தடிப்பதை நோக்கமாகக் கொண்டது.
அதுமட்டுமன்றி வாக்குறுதிகளை வழங்கிய உலக நாடுகளை ஏமாற்றுவதற்காக முன்னெடுக்கப்படுகின்ற ஒரு ஜனாதிபதியின் செயற்பாடாகவே உள்ளது. குறிப்பாக ஜனாதிபதி முன்னெடுக்கும் பேச்சுவார்த்தையானது வெறுமனே புகைப்படப்பிடிப்புக்கானது, ஊடகங்களின் செய்திப்பசிக்கு தீனி போடுவதாகவே உள்ளது.
ஆகவே தமிழ் மக்களின் அபிலாஷைகளை பூர்த்தி செய்வதை அவர் இதய சுத்தியுடன் முன்னெடுக்க விரும்புவாராக இருந்தால் அதற்கு மூன்றாம் தரப்பு மத்தியஸ்தம் அவசியமாகின்றது. விசேடமாக இந்தியா, அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் அதற்கான வகிபாகத்தினைக் கொள்ள முடியும் என்றார்.
