அரசாங்கத்தின் மக்கள் விரோதச் செயற்பாடுகளுக்கு எதிர்ப்பு! – கொழும்பில் பாரிய போராட்டம்!

போராட்டக்காரர் மீது கண்ணீர்ப்புகை, நீர்த்தாரைத் தாக்குதல்

வற் வரி விதிப்பு உள்ளிட்ட அரசாங்கத்தின் மக்களைப் பாதிக்கின்ற செயற்பாடுகளுக்கு எதிர்ப்பினைத் தெரிவித்து, பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியினால் இன்று கொழும்பில் பாரிய போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது.

வற் வரி அதிகரிப்பு, மருந்துப் பற்றாக்குறை, அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றம் உள்ளிட்ட அரசாங்கத்தின் நடவடிக்கைகளினால் ஒட்டுமொத்த மக்களும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இவற்றுக்கு எதிர்ப்பினை வெளியிட்டு, இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

கொழும்பு நகரமண்டபத்திற்கு முன்பாக ஆரம்பமான இந்த ஆர்ப்பாட்டப் போரணியில், நாடளாவிய ரீதியாக இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டிருந்தனர்.

போராட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்ஜித் மத்துமபண்டார, நாடாளுமன்ற உறுப்பினர்களான எஸ்.எம்.மரிக்கார், ஹர்ஷன ராஜகருணா மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான முஜிபுர் ரஹ்மான், ஹிருணிகா பிரேமசந்திர உள்ளிட்ட கட்சியின் ஆதரவாளர்கள் பலர் கலந்து கொண்டிருந்தனர்.

இந்தப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து, கொழும்பு புறநகர் பகுதிகளிலும் ஐக்கிய மக்கள் சக்தியினால் போராட்டங்கள் நடத்தப்பட்டன.

இந்தப் போராட்டத்துக்கு முன்பதாகவே பொலிசாரால் சமர்ப்பிக்கப்பட்ட மனுக்களுக்கு அமைய, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உள்ளிட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் முக்கியமான 16 உறுப்பினர்களுக்கு எதிராக நீதிமன்றம் இன்று தடை உத்தரவினைப் பிறப்பித்திருந்தது.

குறிப்பாக மாளிகாவத்தை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முஸ்லிம் பொது மையவாடி தொடக்கம் பிரதீபா மாவத்தை, சத்தர்ம மாவத்தை, ஜயந்த வீரசேகர மாவத்தை, மில்டன் பெரேரா மாவத்தை, ஜும்மா சந்தி ஊடாக சங்கராஜ மாவத்தை வரையான பகுதிகளுக்கு இடையூறு ஏற்படும் வகையில் செயற்படுவதற்கு இவர்களுக்கு நீதிமன்றம் தடை விதித்திருந்தது. இந்த நிலையிலேயே இந்தப் போராட்டம் இன்று நடைபெற்றது.

எதிர்ப்புப் பேரணியானது நகரசபை மண்டபத்திலிருந்து முன்னோக்கிச் சென்ற நிலையில், பொது நூலகத்திற்கு முன்பாக பொலிஸார் தடைகளை ஏற்படுத்தியும், நீர்த்தாரைப் பிரயோக வாகனங்களைக் கொண்டும் பேரணியை முன்னோக்கி நகராமல் தடுக்க முற்பட்டனர்.

எனினும், போராட்டக்காரர்கள் முன்னோக்கி நகர முற்பட்டபோது, பாதுகாப்புத் தரப்பினரால் நீர்த்தாரை மற்றும் கண்ணீர்ப்புகைத் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன.

You May Also Like

About the Author: digital

Leave a Reply