அதிக வெப்பமான வானிலை காரணமாக ஏற்படக்கூடிய பாதகமான சூழ்நிலைகளில் இருந்து பாடசாலை மாணவர்களை பாதுகாப்பதற்காக வழிகாட்டுதல்கள் அடங்கிய அறிக்கை ஒன்று கல்வி அமைச்சினால் வௌியிடப்பட்டுள்ளது.
இது தொடர்பில் அதிபர்களுக்கு அறிவிக்குமாறு அனைத்து மாகாண கல்விப் பணிப்பாளர்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிக்கை ஒன்றை வெளியிட்டு குறிப்பிட்டுள்ளது.
அதன்படி, குறித்த அறிக்கையில் அதிக வெப்பமான வானிலை காரணமாக மாணவர்களுக்கு ஏற்படக்கூடும் நோய் நிலைமைகளும் அதற்கான முதலுதவிகள் குறித்தும் கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
அதன்படி, அதிக வெப்பம் காரணமாக தசை பிடிப்பு, அதிக வியர்வை, மயக்கம் மற்றும் உடல் சோர்வு, உடல் வெப்பம் அதிகரிப்பு, வலிப்பு, தலைவலி, நினைவிழப்பு, நாடித் துடிப்பு அதிகரிப்பு ஆகிய நோய் நிலைமைகள் ஏற்படக்கூடும் என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன்போது, அனைத்து செயற்பாடுகளில் இருந்தும் விலகி நிழலான இடத்தில் ஓய்வெடுத்தல் மற்றும் போதுமான அளவு நீரினை அருந்துதல் ( 15 நிமிடத்திற்கு ஒரு தடவை அரை கோப்பை நீர்) போன்ற முதலுதவிகளை வழங்குமாறும் வலிப்பு, நினைவிழப்பு போன்ற நோய் நிலைமைகளின் போது வைத்தியசாலையில் அனுமதிக்க நடவடிக்கை எடுக்குமாறும் குறிப்பிடப்பட்டுள்ளது.
