நேற்றிரவு (24) கொழும்பு வெளிவட்ட நெடுஞ்சாலையில் மேம்பாலத்தில் இருந்து இளைஞர் ஒருவர் குதித்து உயிரிழந்துள்ளதாக சந்தேகிக்கப்படுகிறது.
நேற்றிரவு 7.00 மணியளவில் கொழும்பு வெளிவட்ட நெடுஞ்சாலையின் 1.2 கிலோமீற்றர் தூணுக்கு அருகில் உள்ள மேம்பாலத்தில் இருந்து அதிவேக நெடுஞ்சாலையில் விழுந்ததில் 19 வயதுடைய இளைஞன் உயிரிழந்துள்ளார்.
அப்போது, மாத்தறை நோக்கிச் சென்று கொண்டிருந்த கார் மீது அவர் மோதியதாக பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்தில் படுகாயமடைந்த இளைஞன் ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், உயிரிழந்தவர் தனது உயிரை மாய்த்துக் கொள்ள முயற்சித்திருக்கலாம் என கருதுவதால் சந்தேகத்திற்கிடமான சூழ்நிலையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
உயிரிழந்தவர், அதுருகிரிய பிரதேசத்தைச் சேர்ந்த 19 வயதுடையவர் எனவும் பாதுக்கவிலுள்ள தனியார் பல்கலைக்கழகம் ஒன்றில் பாடநெறியைப் படித்து வந்தவர் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவத்தில் இறந்தவர் மோதிய வாகனமும் சேதமடைந்துள்ளதுடன், அதன் சாரதியை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இதேவேளை, பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது, உயிரிழந்த இளைஞன் தற்கொலை செய்து கொள்ளவுள்ளதாக சந்தேகிக்கப்படும் கடிதம் ஒன்று அவரது வீட்டில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
