
அரச அமைப்பின் பிரகாரம் நடக்கவிருக்கும் தேர்தல்கள் பிற்போடப்படுமானால் அதை நாங்கள் கடுமையாக கண்டிக்கின்றோம் என நேற்று (28) நடைபெற்ற ஊடக சந்திப்பில் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,ஐக்கிய தேசிய கட்சியின் பொதுசெயலாளர் பாலித ரங்கே பண்டார தெரிவித்த ஒரு செய்தி ஒன்று இருக்கின்றது. இரண்டு தேர்தல்கள், ஜனாதிபதி தேர்தல் மட்டும் அடுத்த வருடம் நடக்கவிருத்த பொது தேர்தல் இரண்டையும் இரண்டு வருடங்களுக்கு பிற்போடப்படுவதாக யோசனையை முன்வைத்துள்ளாராம்.
இந்நிலையில் ஏற்கனவே மாகாண சபை தேர்தல் நடத்தப்படாமல் ஐந்து வருடங்களாக பிற்போடப்பட்டு வருகிறது. உள்ளூராட்சி தேர்தல்களும் பணம் இல்லாத பொய்யான காரணத்தால் காலவறையின்றி பிற்போடப்பட்டு இருக்கின்றது.
இதனையடுத்து இப்பொழுது நடக்கவிருக்கும் தேர்தல்களும் பிற்போடப்பட்டால் நாட்டில் ஜனநாயகம் குழி தோண்டி புதைக்கப்பட்டதாகத்தான் கருதப்பட வேண்டும் எனவும் அரச அமைப்பின் பிரகாரம் நடக்கவிருக்கும் தேர்தல்கள் பிற்போடப்படுமனால் அதை நாங்கள் கடுமையாக கண்டிக்கின்றோம் எனவும் நாட்டில் மீண்டும் ஒரு பாரிய மக்கள் போராட்டத்திற்கு அது வழிவகுக்கும் எனவும் இதன் போது அவர் தெரிவித்தார்.