இந்த ஆண்டு இறுதியில், அடுத்த ஆண்டுக்கான பட்ஜெட் முன்மொழிவு நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட மாட்டாது என நிதி அமைச்சின் சிரேஷ்ட அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். அதன்படி, அடுத்த ஆண்டின் (2025) ஆரம்ப சில மாதங்களுக்கான இடைக்கால கணக்கொன்று சமர்ப்பிக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இவ்வருட இறுதியில் (2024) தேர்தலொன்று நடத்தப்படவுள்ளதுடன், அதற்கமைய தெரிவாகும் ஏழாவது புதிய ஜனாதிபதி அல்லது புதிய அரசாங்கம் தமது கொள்கைகளுக்கமைய வரவு செலவுத் திட்டத்தை முன்வைக்க இடமளிக்க வேண்டும் எனும் நோக்கிலேயே இம்முறை வரவு செலவுத் திட்டம் முன்வைக்கப்பட மாட்டாது என கூறப்படுகின்றது.
இதேவேளை, தேர்தல்கள் நடத்தப்படுவதால் ஆட்சி மாற்றம் ஏற்படக் கூடும் என்பதால் வரவு செலவுத் திட்டப் பிரேரணையை கொண்டுவர முடியாது என மேற்படி நிதி அமைச்சின் உயர் அதிகாரி தெரிவித்துள்ளார். இது தொடர்பில் இறுதித் தீர்மானம் எடுக்கப்படாத போதிலும், இந்த வருட இறுதியில் எதிர்வரும் மாதங்களுக்கான வரவு செலவுத் திட்டத்தை முன்வைப்பதில் நடைமுறை சிக்கல்கள் ஏற்படும் எனவும் அந்த அதிகாரி மேலும் தெரிவித்துள்ளார்.
