எதிர்வரும் ஒக்டோபர் மாதம் முதல் தொழில்துறை மற்றும் கனரக வாகனங்கள் இறக்குமதிக்கு அனுமதி வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கட்டம் கட்டமான வாகன இறக்குமதிக்கான அனுமதியின் கீழேயே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
அடுத்த வருட தொடக்கத்தில் வாகன இறக்குமதிக்கு மீண்டும் அனுமதி வழங்கும் தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதற்கான பூர்வாங்க முன்மொழிவின் கீழேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கைத்தொழில் மற்றும் கனரக வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு அனுமதி வழங்கியதன் பின்னர் முச்சக்கர வண்டிகள் மற்றும் மோட்டார் சைக்கிள்களை இறக்குமதி செய்வதற்கு அனுமதி வழங்கப்படவுள்ளதாகவும் அறியமுடிகின்றது.
வாகனங்களை படிப்படியாக மீண்டும் இறக்குமதி செய்யும் திட்டத்தின் கீழ் அனுமதிக்கப்படவுள்ள அடுத்த வகை வாகனங்கள் சிறிய ரக மோட்டார் வாகனங்கள் எனவும், சொகுசு மற்றும் அதி சொகுசு வாகனங்களுக்கு கடைசியாகவே அனுமதி வழங்கப்படும் எனவும் அரச உயர்மட்ட வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
கையிருப்பின் படி ஒரு வருடத்தில் இறக்குமதி செய்யப்படும் அதிகபட்ச வாகனங்களின் எண்ணிக்கை குறித்து மத்திய வங்கியிடம் அரசாங்கம் ஆலோசனை நடத்த உள்ளதாகவும் அறியவருகின்றது. இருப்பினும், அரசாங்க ஊழியர்களுக்கு வரி அறவிடப்படாத திட்டங்களின் கீழ் வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு அனுமதிப்பது குறித்து அரசாங்கம் உடனடியாக பரிசீலிக்காது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
