கல்வி சாரா ஊழியர்கள் இன்றும் நாளையும் சுகயீன விடுமுறையில் ஈடுபடும் போது, நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பாடசாலைகள், தேசிய கல்வியியற் கல்லூரிகள், ஊழியர்கள் மற்றும் மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யுமாறு கல்வி அமைச்சின் செயலாளர் பாதுகாப்புச் செயலாளரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
இன்றும் (24) நாளையும் (25) சுகயீனமுற்றுள்ளதாக அறிவித்து அரச பாடசாலைகளின் கல்விசாரா ஊழியர்கள் தொழிற்சங்க நடவடிக்கையை ஆரம்பித்துள்ளனர்.
அதன்படி, இந்த நாட்களில் பள்ளிகள் செயல்படுவது குறித்து பள்ளி முதல்வர்களுக்கு கல்வி அமைச்சகம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
இடையூறுகள் இன்றி தொடர்ச்சியான கல்வியை உறுதி செய்வதற்காக பாடசாலை சமூகத்துடன் இணைந்து கல்வி நடவடிக்கைகளை திறம்பட ஒருங்கிணைக்கும் முறையான திட்டத்தை ஆரம்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அனைத்து மாகாண கல்விச் செயலாளர்கள் மற்றும் மாகாண கல்விப் பணிப்பாளர்களுக்கும் இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, இந்த தொழிற்சங்க நடவடிக்கையை அடுத்து முன்னெச்சரிக்கையாக நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பாடசாலைகள், தேசிய கல்வியியல் கல்லூரிகள், கல்வி ஊழியர்கள், பாடசாலை மாணவர்கள் மற்றும் பாடசாலைகளின் பௌதீக வளங்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு பாதுகாப்பு அமைச்சிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கல்வி அமைச்சின் செயலாளர் ஜே.எம்.திலகா ஜயசுந்தர, பாதுகாப்பு செயலாளர் கமல் குணரத்னவிடம் இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.
இதேவேளை, அரச பல்கலைக்கழகங்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு பொது பாதுகாப்பு அமைச்சிடம் இருந்தும் இதே கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
