திருத்தப்பட்ட புதிய பஸ் கட்டண அறவிடலின் போது மிகுதிக் காசு வழங்க பஸ் நடத்துனர்களிடம் சில்லறை நாணயங்கள் இல்லாததால் பயணிகளுக்கும் நடத்துனருக்கும் இடையில் தினமும் முரண்பாடுகள் ஏற்படுவதாக அகில இலங்கை பஸ் உரிமையாளர் சங்கத்தின் செயலாளர் அஞ்சன பிரியஞ்சித் தெரிவித்துள்ளார்.
மத்திய வங்கி நாளொன்றுக்கு ஒவ்வொரு பயணிகள் பேரூந்துக்கும் ஆயிரம் ரூபா சில்லறை நாணயங்களை வழங்கினால் இந்நிலைமையை சமாளிக்க முடியும் என தாம் நம்புவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த திருத்தங்கள் தொடர்பில் தமது தொழிற்சங்கத்துடன் முன்னமே கலந்தாலோசித்திருந்தால் இந்த முரண்பாடுகள் ஏற்பட்டிருக்காது எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக பயணிகளிடம் விசாரித்த போது, நடத்துனர்களிடம் சில்லறைக் காசு கையில் இருந்தாலும் அவர்கள் மிகுதிக் காசு தரப்போவதில்லை!, என தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
