அதுருகிரியவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் காயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட இரண்டு நோயாளர்கள் தற்போது வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் ருக்ஷான் பெல்லானா தெரிவித்துள்ளார்.
ஒரு பெண்ணும் ஆண் ஒருவரும் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், இருவருக்குமே இடுப்பில் இருந்து காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
அந்த பெண்ணின் காலில் ஏற்பட்ட காயம் மிகவும் தீவிரமானதாக இருந்தாலும், அவரது உடல்நிலை தற்போது சீரான நிலையில் இருப்பதாகவும் வைத்தியர் பெல்லானா கூறினார்.
அவர் மூன்று மணி நேர அறுவை சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டதாகவும், அவரது காயம் ஓரளவு தீவிரமானதால் தற்போது தீவிர சிகிச்சை பிரிவில் இருப்பதாகவும் அவர் கூறினார்.
துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த பிரபல பாடகர் கே.சுஜீவா, மற்றுமொரு ஆண், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவருவதுடன், காயமடைந்த மேலும் இரு பெண்கள் ஹோமாகம வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அதுருகிரிய மணிக்கூட்டு கோபுரத்திற்கு அருகில் உள்ள அழகு நிலையம் திறப்பு விழாவின் போது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. துப்பாக்கிச் சூட்டைத் தொடர்ந்து 6 பேர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
எவ்வாறாயினும், கிளப் வசந்த என அழைக்கப்படும் 55 வயதான சுரேந்திர வசந்த பெரேரா என்ற பிரபல வர்த்தகர் மற்றும் 38 வயதுடைய மற்றுமொரு ஆணும் காயங்களுக்கு உள்ளான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது உயிரிழந்துள்ளதாக பொலிஸார் பின்னர் உறுதிபடுத்தினர்.
