வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள ரயில்வே ஊழியர்கள் இராஜினாமா ! அமைச்சர் பந்துல தெரிவிப்பு!

பணிப்புறக்கணிப்பில் கலந்து கொண்ட அனைத்து ரயில்வே ஊழியர்களும், தமது பதவிகளை இராஜினாமா செய்துள்ளதாகக் கருதி கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

பணிக்கு சமூகமளிக்காத மற்றும் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ள அனைத்து நிலைய அதிபர்களும், பதவியை விட்டு வெளியேறியதாக கருதப்படும் என இலங்கை புகையிரத பொது முகாமையாளர் கடிதம் மூலம் அறிவித்துள்ளார்.

நேற்று (10) நண்பகல் 12.00 மணிக்குள் கடமைக்கு சமூகமளிக்கத் தவறும் அனைத்து நிலைய அதிபர்கள் மற்றும் புகையிரத கட்டுப்பாட்டாளர்கள் தமது பதவிகளை இராஜினாமா செய்தவர்களாக கருதப்படுவார்கள் என இலங்கை புகையிரத பொது முகாமையாளர் எச்சரித்திருந்தார்.

அதன்படி, வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள அனைத்து ரயில் நிலைய அதிபர்கள் மற்றும் ரயில்வே கட்டுப்பாட்டாளர்கள் அந்தந்த ரயில் நிலையங்களிலோ அல்லது குறைந்த பட்சம் அருகில் உள்ள ரயில் நிலையத்திலோ அந்த காலக்கெடுவிற்கு முன்னதாக பணிக்கு சமூகமளிக்குமாறு அறிவுறுத்தப்பட்டனர்.

எவ்வாறாயினும், புகையிரத சேவைகள் உள்ளிட்ட பொதுப் போக்குவரத்தை அத்தியாவசிய சேவைகளாக பிரகடனப்படுத்தியுள்ள நிலையில், நிலைய அதிபர்கள் சங்கம் முன்னெடுத்துள்ள பணிப்புறக்கணிப்பு சட்டவிரோதமானது என போக்குவரத்து அமைச்சின் செயலாளர் ரஞ்சித் ரூபசிங்க வலியுறுத்தியுள்ளார்.

மேலும், கடமைக்கு சமூகமளிக்காதவர்களுக்கு எதிராக கடுமையான ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறாயினும், புகையிரத அதிகாரிகள் மற்றும் போக்குவரத்து அமைச்சின் எச்சரிப்புகளை மீறி தமது பணிப்பகிஷ்கரிப்பை தொடர்வதாக குறித்த புகையிரத தொழிற்சங்கங்கள் உறுதியளித்துள்ளன.

அடக்குமுறை மூலம் தொழிற்சங்கங்களை கட்டுப்படுத்த அரசாங்கம் முயற்சித்தால், ஒட்டுமொத்த புகையிரத சேவையின் தொழிற்சங்கங்களும் ஒன்றிணைந்து அத்தகைய அடக்குமுறைகளுக்கு எதிராக போராடுவதற்கு ஒருபோதும் தயங்காது என புகையிரத நிலைய அதிபர்கள் சங்கம் இன்று வலியுறுத்தியுள்ளது.

புகையிரத ஊழியர்கள் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் நாசகார நடவடிக்கைகளில் ஈடுபடமாட்டார்கள் எனவும் அவர்களின் கோரிக்கைகள் உடனடியாக தீர்க்கப்படும் என நம்புவதாகவும் தொழிற்சங்கத்தின் தலைவர் சுமேதா சோமரத்ன தெரிவித்துள்ளார்.

தமது தொழிற்சங்கத்தின் நிறைவேற்று சபை இன்று (11) பிற்பகல் கூடி தமது கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால் எதிர்கால நடவடிக்கை குறித்து தீர்மானிக்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

You May Also Like

About the Author: Chaithannya Dhanu

Leave a Reply