ரணிலுக்கு ஆதரவளிப்போர் மீது ஒழுக்காற்று நடவடிக்கை!

2024 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவளிக்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) உறுப்பினர்களுக்கு எதிராக கடுமையான ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தீர்மானத்தை தெரிவிக்கும் கடிதங்கள் கூடிய விரைவில் சம்பந்தப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அனுப்பி வைக்கப்படும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

ஒழுக்காற்று நடவடிக்கைகளின் பின்னர் கட்சியின் தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் பாராளுமன்ற உறுப்பினர்களின் கட்சி உறுப்புரிமை இரத்து செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதித் தேர்தலின் போது எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசிப்பதற்காக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அரசியல் குழு அண்மையில் கூடியது.

கட்சியில் இருந்து ஒருவரை வேட்பாளரை நியமிப்பது என முடிவு செய்யப்பட்டதுடன், அந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் எம்.பி.க்கள் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் முடிவு செய்யப்பட்டது.

எவ்வாறாயினும், கட்சியின் தீர்மானத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்த எம்.பி.க்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு கடந்த சில வாரங்களாக அக்கட்சியின் அரசியல் சபைக்கு கடும் அழுத்தம் கொடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன எடுத்த தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் பாராளுமன்ற உறுப்பினர்களின் கட்சி உறுப்புரிமையை இரத்து செய்யுமாறு அக்கட்சியின் செயற்பாட்டாளர்கள் பலர் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதன்படி, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தீர்மானங்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பது தொடர்பான கடிதங்கள் உடனடியாக அனுப்பி வைக்கப்படும் என அக்கட்சியின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

You May Also Like

About the Author: Chaithannya Dhanu

Leave a Reply