தேசியப்பட்டியல் ஆசனத்தை நிறுத்திவைத்துள்ள கூட்டமைப்பு !

தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு கிடைத்த தேசியப் பட்டியலை இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவுக்கு வழங்கப்பட வேண்டும் என தமிழரசுக் கட்சியின் யாழ். மாவட்டக் கிளை தீர்மானம் எடுத்துள்ளது.

குறித்த ஆசனம் அம்பாறை மாவட்டத்தின் தவராசா கலையரசனுக்கு வழங்குவதாக இன்று ஞாயிற்றுக்கிழமை காலை தமிழரசுக் கட்சியின் செயலாளர் கி.துரைராஜசிங்கம் அறிவித்திருந்தார்.

எனினும் அந்த தேசியப்பட்டியல் ஆசனத்தில் சடுதியான திருப்பம் ஏற்பட்டுள்ளது. பரவலாக எழுந்த எதிர்ப்பையடுத்து, அம்பாறைக்கு வழங்கப்பட்ட பிரதிநிதித்துவம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இன்று அக்கட்சியின் யாழ். மாவட்டக் கிளை உறுப்பினர்கள் மார்ட்டின் வீதியில் உள்ள தலைமை அலுவலகத்தில் அவசரமாகக் கூடினர்.

இக்கூட்டத்தில், தேசியப் பட்டியல் ஆசனம் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவிற்கே வழங்கப்பட வேண்டும் என்று தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இதே வேளை அம்பாறையை சேர்ந்த த.கலையரசனை தேசியப்பட்டியல் எம்.பியாக்குவதாக குறிப்பிட்ட கடிதத்தை, தேர்தல்கள் திணைக்களத்திற்கு அனுப்பாமல் தாமதிக்கும்படி கட்சியின் செயலாளரிற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

பொதுவான முடிவு ஒன்றினை எடுக்காமல் தன்னிச்சையாக யாராவது தேசியப் பட்டியலுக்கு நியமிக்கப்பட்டால் அந்த முடிவு மீள்பரிசிலனை செய்யப்பட வேண்டும் என்றும் அக்கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இதன்படி, கலையரசனை தேசியப்பட்டியல் ஆசனத்திற்கு நியமிக்கும் முடிவை தற்காலிகமாக, தமிழ் தேசிய கூட்டமைப்பு நிறுத்தி வைத்துள்ளது.

You May Also Like

About the Author: kalaikkathir