
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் தனித்துப் போட்டியிடுவதில் கவனம் செலுத்தி வருவதாக கட்சித் தகவல்கள் தெரிவிக்கின்றன.
எனினும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பிரதான பங்காளிக் கட்சியான இலங்கை சமசமாஜக் கட்சியுடன் மாத்திரம் உடன்படிக்கையை ஏற்படுத்துவதில் மாத்திரம் அவதானம் செலுத்தியுள்ளதாக அந்த தகவல்கள் குறிப்பிட்டுள்ளன.
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அரசியல் சபை மற்றும் நிறைவேற்று குழு அண்மையில் கூடி, இந்த விடயங்கள் தொடர்பில் விரிவாக ஆராய்ந்துள்ளது.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் தனித்து போட்டியிடுவதே பொருத்தமானது என அக்கட்சியில் உள்ளவர்கள் பலரும் கருத்து வெளியிட்டிருந்தபோதும், இந்த நிலைமைகள் எதிர்காலத்தில் மாறலாம் எனவும் சில பிரதிநிதிகள் கருதுகின்றனர்.
அத்துடன், பொதுத் தேர்தலின் போது கட்சியில் இருந்து விலகியவர்களை மீண்டும் இணைத்துக்கொள்வது தொடர்பிலும் அண்மையில் நடைபெற்ற நிறைவேற்று குழுவில் நீண்ட நேரம் கலந்துரையாடப்பட்டதாக கூறப்படுகிறது.
இதன்போது, கட்சியில் இருந்து விலகியவர்களை மீண்டும் இணைத்துக்கொள்வது பொருத்தமானது என பலர் சுட்டிக்காட்டினாலும், மற்றொரு குழு இதற்கு நேர்மாறான கருத்துக்களை தெரிவித்துள்ளதாகவும் அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.