மகிந்தவுக்கு முடியாது என்ற புத்தகத்தை எழுதிய எஸ்.பி.க்கு பெரும் சிக்கல்

கடந்த 2015 ஆம் ஆண்டு ஜனவரி 8 ஆம் திகதி ஜனாதிபதித் தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தோல்வியடைந்த பின்னர், அன்றைய பொதுத் தேர்தலுக்கு முன்னர் “மகிந்தவுக்கு முடியாது” என்ற தலைப்பில் புத்தகம் ஒன்றை வெளியிட்ட முன்னாள் அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க தற்போது மிகவும் கவலைக்குரிய நிலைமையை எதிர்நோக்கி வருகிறார் என தெரிவிக்கப்படுகிறது.

2015 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்த எஸ்.பி.திஸாநாயக்கவை அன்றைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, தேசிய பட்டியல் மூலம் நாடாளுமன்ற உறுப்பினராக நியமித்து, நல்லாட்சி தேசிய அரசாங்கத்தில் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சராகவும் நியமித்தார்.

2018 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டு வந்த நம்பிக்கையில்லாப் பிரேரணை தோல்வியடைந்த பின்னர், எஸ்.பி.திஸாநாயக்க உட்பட 15 பேர் கொண்ட அணியினர் எதிரணியில் இணைந்து செயற்பட்டனர்.

இந்த நிலையில் கடந்த பொதுத் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் சார்பில் நுவரெலியா மாவட்டத்தில் போட்டியிட்ட எஸ்.பி. திஸாநாயக்க, விருப்பு வாக்கு அடிப்படையில் மூன்றாவது இடத்தை பிடித்து நாடாளுமன்றத்திற்கு தெரிவானார்.

எனினும் மகிந்த ராஜபக்ச தலைமையிலான அமைச்சரவையில் அமைச்சர் பதவியோ, ராஜாங்க அமைச்சர் பதவியோ எஸ்.பி.திஸாநாயக்கவுக்கு வழங்கப்படவில்லை என்பதுடன் அவருக்கு நுவரெலியா மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு தலைவர் பதவி மட்டுமே வழங்கப்பட்டது.

எஸ்.பி. திஸாநாயக்க, முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க, ரணில் விக்ரமசிங்க, மகிந்த ராஜபக்ச மற்றும் மைத்திரி – ரணில் அரசாங்கங்களில் முக்கிய அமைச்சு பதவிகளை வகித்த அரசியல்வாதி என்பது குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: kalaikkathir