செப்டெம்பர் 2 ஆம் திகதி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் வருடாந்த மாநாடு!

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் வருடாந்த மாநாடு எதிர்வரும் செப்டெம்பர் 2 ஆம் திகதி கொழும்பில் நடைபெறவுள்ளது.

இதன்போது முக்கிய சில பதவிகளில் மாற்றம் வரக்கூடும் என அக்கட்சி வட்டாரங்களில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது.

இதன்படி சுதந்திரக் கட்சியின் தலைமைப் பதவியில் இருந்து மைத்திரிபால சிறிசேன விலகுவார் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

இளைஞர் ஒருவருக்கு வாய்ப்பளித்து கட்சியை அடுத்தகட்டம் நோக்கி கொண்டுசெல்வதற்காகவே அவர் இம்முடிவை எடுப்பார் என செய்தி வெளியாகியுள்ளது.

எனினும் இது பற்றி இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை. உப பிரதமர் பதவி கிடைக்கும் பட்சத்தில் மாத்திரமே அவர் தலைமைப்பதவியை விட்டுக்கொடுப்பார் எனவும் கூறப்படுகின்றது.

அத்துடன் இளைஞர் அணித் தலைவராக செயற்படும் சாந்த பண்டாரவும் பதவி விலகவுள்ளார்.

பொதுத்தேர்தலில் சு.கவின் சார்பில் யாழ்.மாவட்டத்தில் வெற்றிபெற்ற அங்கஜன் இராமநாதனுக்கு உப தலைவர் பதவி வழங்கப்படவுள்ளது.

அதேபோல மைத்திரிபால சிறிசேனவின் மகளும் மத்திய செயற்குழுவுக்குள் உள்வாங்கப்படுவார் எனத் தகவல் வெளியாகியுள்ளது, நடைபெறவுள்ள மாகாண சபைத் தேர்தலில் வடமத்திய மாகாணத்தில் அவர் போட்டியிடவுள்ளார்.

You May Also Like

About the Author: kalaikkathir