பட்டதாரி வேலைவாய்ப்பு பெற்ற இளைஞன் கட்டிடத்தில் இருந்து விழுந்து பலி!!

புதிய அரசாங்கத்தின் பட்டதாரி பயிலுனர் தொழில் வழங்கும் பெயர் பட்டியலில் பெயர் உள்ளடக்கப்பட்டிருந்த இளைஞன் கடமைப் பொறுப்பேற்பதற்கு முன்னமே கட்டிடத்தில் இருந்து விழுந்து பலியான சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக கொக்கட்டிச்சோலைப் பொலிஸார் தெரிவித்தனர்.

முனைக்காடு கிராமத்தில் வசிக்கும் சச்சிதானந்தன் விக்னேஸ்வரன் (வயது 29) என்ற இளைஞனே இவ்வாறு விபத்தில் சிக்கி படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வந்த நிலையில் வெள்ளிக்கிழமை 21ஆம் திகதி மட்டக்களப்பு போதனா வைத்தியாசலையில் உயிரிழந்துள்ளார்.

இவ்விளைஞன் பட்டதாரி பயிலுநர் நியமனத்தின் பொருட்டு செப்ரெம்பெர் 2ஆம் திகதி கடமையைப் பொறுப்பேற்க இருந்தார்.

அதற்கு இன்னமும் பல தினங்கள் இருக்கின்ற நிலையில் குடும்ப கஷ்ட நிலைமை காரணமாக இவர் காத்தான்குடியில் கட்டட நிர்மாண வேலைகளில் உதவியாளராக வேலை செய்து வந்துள்ளார்.

இதன் நிமித்தம் வீடொன்றில் மேலே பொருத்தப்பட்டுள்ள நீர்த்தாங்கியை சுத்தம் செய்ய ஏறியபோது கடந்த 19ஆம் திகதி தவறுதலாக கீழே விழுந்து படுகாயமடைந்துள்ளார்.

உடனடியாக காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட அவர் மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பயனின்றி வெள்ளிக்கிழமை உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் பற்றிய மேலதிக விசாரணைகளை சம்பவம் இடம்பெற்ற பொலிஸ் பிரிவிலுள்ள காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். ‪

You May Also Like

About the Author: kalaikkathir