முகாமிலிருந்து தப்பியவர் மன்னாரில் பிடிபட்டார்!

வவுனியா, பெரியகாடு இராணுவ முகாம் தனிமைப்படுத்தல் நிலையத்தில் தனிமைப்படுத்தலில் இருந்து தப்பியவர் மன்னாரில் வைத்து இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

வெளிநாட்டிலிருந்து விசேட விமானத்தில் அழைத்துவரப்பட்டு தங்கவைக்கப்பட்டிருந்த சிலாபம் மாதம்பே பகுதியைச் சேர்ந்த விஜித றுவான் குணவர்த்தன (வயது-36) என்பவர் நேற்றிரவு தப்பிச் சென்றிருந்தார்.

இந்நிலையில், அவர் இன்று மாலை 6.30 மணியளவில் மன்னார் சௌத்பார் ரயில் நிலையப் பகுதியில் வைத்து இராணுவத்தினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

குறித்தநபரை மீண்டும் வவுனியா பெரியகாடு, இராணுவ முகாம் தனிமைப்படுத்தல் நிலையத்திற்கு அழைத்துச்செல்ல இராணுவத்தினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இதேவேளை, குறித்த நபருக்கு ஏற்கனவே எடுக்கப்பட்ட மாதிரிகளுக்கான கொரோனா பரிசோதனை முடிவுகள் இன்னும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: kalaikkathir