பாடசாலை வேளையில் கனரக வாகனங்கள் பயணிக்க தடை

பாடசாலை வேளையில் கனரக வாகனங்கள் பயணிக்க தடை விதிக்க நகரசபையால் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு பொலிஸாருக்கு அறிவித்த போதிலும் பொலிஸார் நடவடிக்கை எடுக்கவில்லை என வவுனியா நகரசபையின் உறுப்பினர் சு. காண்டீபன் தெரிவித்தார்.

இவ்விடயம் தொடர்பில் அவர்கள் கருத்து தெரிவிக்கையில்,

வவுனியாவில் நகர்ப்பகுதியில் பாடசாலை வேளையில் அதிகளவான வாகன நெரிசல் ஏற்பட்டு வரும் நிலையில் கனரக வாகனங்களின் பயணமும் பாரிய அச்சுறுத்தலாக மாறியுள்ளது. இதன் காரணமாக வவுனியா நகரசபையில் பல தடவைகள் பாடசாலை ஆரம்பிக்கும் நேரம் மற்றும் பாடசாலை முடிவடையும் நேரங்களில் டிப்பர் போன்ற கனரக வாகனங்களை நகருக்கு அப்பால் ஒரு மணி நேரம் நிறுத்தி வைக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இது தொடர்பில் வவுனியா பொலிஸாருக்கும் தெரிவிக்கப்பட்டிருந்தது

எனினும் பொலிஸார் உரிய நடவடிக்கை எடுக்காமையினால் பாடசாலை நேரங்களில் பாரிய அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. விபத்துக்கள் சம்பவிக்கும் நிலை காணப்படுகின்றது.

வவுனியா அரசாங்க அதிபராக திருமதி சார்ள்ஸ் கடமையாற்றியபோது இந் நடைமுறையை பின்பற்றியிருந்தார். எனினும் அவரது இடமாற்றத்தின் பின்னர் மீண்டும் இவ்வாறான நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இது தொடர்பில் பொலிஸார் கவனம் செலுத்த வேண்டும் என தெரிவித்தார்

You May Also Like

About the Author: kalaikkathir