20ஆவது திருத்த சட்ட வரைவுக்கு எதிராக உயர்நீதிமன்றில் சம்பந்தன் மனுத்தாக்கல்

அரசியலமைப்பின் 20ஆவது திருத்த வரைபுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனும் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

அத்தோடு, இன்று ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் கட்சியின் பொதுச் செயலாளர் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்தும பண்டாரவினால் விசேட மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இதேநேரம், மாற்றுக் கொள்கைகளுக்கான மத்திய நிலையம் சார்பாக பாக்கியசோதி சரவணமுத்து, சட்டத்தரணி நாகானந்த கொடித்துவக்கு, அனில் காரியவசம் ஆகியோரும் இன்று 20ஆவது திருத்தத்திற்கு எதிராக விசேட மனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.

இதேவேளை, 20 ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டமூலத்தை ஆட்சேபனைக்கு உட்படுத்தி சட்டத்தரணி இந்திக கால்லகே நேற்று உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றித் தாக்கல் செய்திருந்தார்.

இந்த நிலையில், தற்போது 20ஆவது திருத்த வரைபுக்கு எதிராக மொத்தம் ஆறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

20 ஆவது அரசியலமைப்பு திருத்த வரைபு எதிர்க்கட்சியின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் நாடாளுமன்றத்தில் நேற்று (22) நீதி அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரியினால் சமர்ப்பிக்கப்பட்டது.

இந்நிலையில் ஒரு வார காலத்தினுள் இதற்கு எதிராக யாரேனும் உயர் நீதிமன்றத்தை நாடினால் 21 நாட்களுக்கு 20வது திருத்தம் தொடர்பாக எந்த முன்னெடுப்பையும் நாடாளுமன்றத்துக்குள் முன்னெடுக்க முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: kalaikkathir