விவசாயிகளுக்கு இடையூறு விளைவிக்காதீர்கள் – நீதிமன்றம் உத்தரவு

திருகோணமலையில் தொல்பொருள் திணைக்களம் கையகப்படுத்தியுள்ள தென்னமரவாடி மற்றும் திரியாய் பகுதிகளில், தமிழ் மக்களுக்கு சொந்தமான விவசாயக் காணிகளில் விவசாயம் மேற்கொள்வதற்கு எவ்விதமான இடையூறுகளையும் விளைவிக்கக்கூடாதென உத்தரவிட்டுள்ள நீதிமன்றம், இடைக்காலத் தடையுத்தரவையும் பிறப்பித்துள்ளது.

நேற்று (10) திருகோணமலை மேல் நீதிமன்றம் மனு மீதான விசாரணையை இம்மாதம் 23ஆம் திகதிக்கு ஒத்திவைத்தது.

தமிழ் மக்கள் நூற்றாண்டுகளாக விவசாய நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்த திரியாய மற்றும் தென்னமரவாடி போன்ற பகுதிகளிலுள்ள விவசாயக் காணிகளை அளந்த தொல்பொருள் திணைக்களம் எல்லைக் கற்களையும் நாட்டியிருந்தது.

அக் காணிகளுக்குள் எவ்விதமான விவசாய நடவடிக்கைகளிலும் ஈடுபட வேண்டாமென தொல்பொருள் திணைக்களம், காணி ஆணையாளர் திணைக்களம் அறிவுறுத்தியிருந்தது.

அத்துடன், விவசாய நடவடிக்கையில் ஈடுபடுபவர்களை தடுக்கும் நடவடிக்கைகளை காவல்துறையினரும் அண்மைக்காலமாக மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பில் சட்டத்தரணி கிர்சாந்தினி உதயகுமார் மனுவொன்றைத் தாக்கல் செய்தார்.

அவருடைய அறுவுறுத்தலுக்கு அமைய தாக்கல் செய்யப்பட்ட மனு ஆராயப்பட்டபோது வட மாகாண சபையின் முன்னாள் உறுப்பினரும் சட்டத்தரணியுமான கேசவன் சயந்தன் ஆஜராகியிருந்தார்.

அத்துடன் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரனும் நீதிமன்றத்தில் பிரசன்னமாய் இருந்தார்.

மனுவை ஆராய்ந்த திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் விவசாயிகளின் விவசாய நடவடிக்கைக்கு எவ்விதமான இடையூறுகளையும் விளைவிக்கக்கூடாதென இடைக்கால தடையுத்தரவை விதித்து மனு மீதான மேலதிக விசாரணையை இம்மாதம் 23ஆம் திகதிக்கு ஒத்திவைத்தார்.

You May Also Like

About the Author: kalaikkathir