வெளிநாடுகளில் இருந்து மேலும் ஒரு தொகுதியினர் நாடு திரும்பினர்

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக வெளிநாடுகளில் நிர்கதிக்குள்ளாகியிருந்த 128 பேர் நாட்டை வந்தடைந்துள்ளனர்.

சீனா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் நிர்க்கதிக்குள்ளாகியிருந்த இலங்கையர்களும், இலங்கையில் உள்ள வெளிநாட்டு தூதரங்களில் பணிபுரியும் அதிகாரிகளுமே இவ்வாறு நாட்டுக்கு அழைத்துவரப்பட்டுள்ளனர்,

இதற்கமைய, நேற்று மாலை 6.35 அளவில், சீனாவின் ஷங்காய் விமான நிலையத்தில் இருந்து வருகை தந்த விமானத்தின் ஊடாக, ஐந்து இலங்கையர்கள் நாட்டை வந்தடைந்துள்ளனர்.

இதனையடுத்து, நேற்றிரவு 11.30 அளவில் ஐக்கிய அரபு இராஜ்ஜியத்தின் டுபாய் நகரிலிருந்து வருகை தந்த எமிரேட்ஸ் விமான சேவையின் ஊடாக, 59 பேர் நாட்டை வந்தடைந்துள்ளனர்.

இதேவேளை, கட்டாரில் நிர்க்கதிக்குள்ளாகியிருந்த 39 பேர் இன்று அதிகாலை 1.45 அளவில் நாட்டை வந்தடைந்ததாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

இவ்வாறு ஐக்கிய அரபு இராஜ்ஜியம் மற்றும் கட்டார் ஆகிய நாடுகளில் இருந்து வருகை தந்தோர், இலங்கையில் உள்ள தூதரகங்களில் பணிபுரிவோர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, தொழில் நிமிர்த்தம் ஐக்கிய அரபு இராஜ்ஜியத்திற்கு சென்றிருந்த 25 இலங்கையர்கள் இன்றைய தினம் நாட்டை வந்தடைந்துள்ளனர்.

இதற்கமைய, அவர்கள் ஶ்ரீ லங்கன் விமான சேவைக்கு சொந்தமான விமானமொன்றின் ஊடாக, இன்று அதிகாலை 4.30 அளவில் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.

இந்த நிலையில், அவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது

You May Also Like

About the Author: kalaikkathir