
யாழ்ப்பாணம் மாவட்டத்திலிருந்து கொழும்புக்குச் சென்று அத்தியாவசிய உணவுப் பொருள்களை ஏற்றிவரும் பாரவூர்களின் சாரதிகள் மற்றும் உதவியாளர்களில் முதல்கட்டமாக 30 பேருக்கு நடத்தப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையில் ஒருவருக்கும் கோரோனா தொற்று இல்லை என கண்டறியப்பட்டுள்ளது.
இந்த தகவலை வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் வெளியிட்டுள்ளார்.
கொழும்பிலிருந்து அத்தியாவசிய பொருள்களை யாழ்ப்பாணத்திற்கு ஏற்றிவந்த பாரவூர்திகளின் சாரதிகள், உதவியாளர்கள் 30 பேரின் மாதிரிகள் நேற்று யாழ்ப்பாணம் பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்களத்தினால் பெறப்பட்டது.
30 பேரின் மாதிரிகளும் யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் வைத்து நேற்று பெறப்பட்டன.
அவர்களின் மாதிரிகள் பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
இதன்போது 30 பேருக்கும் கோரோனா தொற்று இல்லை என இன்று பிசிஆர் பரிசோதனை அறிக்கை கிடைத்துள்ளது என்று வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
கொழும்பு கோரோனா வைரஸ் பரவல் அபாய வலயமாக காணப்படும் நிலையில் அங்கு சென்று வந்த யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பாரவூர்திச் சாரதிகள் மற்றும் உதவியாளர்களுக்கு இவ்வாறு பி.சி.ஆர் பரிசோதனை முன்னெடுக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.