சுருண்டது இந்தியா! வரலாறு படைத்தது அவுஸ்திரேலியா

இரண்டாவது பருவத்திற்கான (2023) ஐ.சி.சி (ICC) உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டியில் வெற்றி பெற்றுள்ள அவுஸ்திரேலிய அணி அனைத்து ஐ.சி.சி கிண்ணங்களையும் கைப்பற்றிய முதலாவது அணி என்ற வரலாற்றை உருவாக்கியுள்ளது.

உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டி கடந்த புதன்கிழமை இங்கிலாந்தின் லண்டன் ஓவல் மைதானத்தில் ஆரம்பமானது.

இரண்டாவது பருவத்திற்கான ஐ.சி.சி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு இந்தியாவும், அவுஸ்திரேலியாவும் தெரிவாகியிருந்தன.

இப்போட்டியின் நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய அணித்தலைவர் ரோஹித் சர்மா முதலில் களத்தடுப்பை தெரிவு செய்திருந்தார்.

அதன்படி, முதலில் துடுப்படுத்தாடிய அவுஸ்திரேலிய அணி 469 ஓட்டங்கள் குவித்து ஆட்டம் இழந்தது. அணி சார்பில் ஸ்டீவ் ஸ்மித் 121 ஓட்டங்களையும் டிராவிஸ் ஹெட் 163 ஓட்டங்களையும் அதிகபட்சமாக பெற்றிருந்தனர்.

அடுத்து துடுப்பாடிய இந்திய அணி முதல் இன்னிங்சில் 296 ஓட்டத்தில் சகல இலக்குகளையும் இழந்தது. இந்திய அணி சார்பில் ரஹானே 89 ஓட்டங்களையும் ஷர்துல் தாக்கூர் 51 ஓட்டங்களையும் பெற்றிருந்தனர்.

பின்னர் 173 ஓட்டங்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய அவுஸ்திரேலிய அணி 8 விக்கெட் இழப்புக்கு 270 ஓட்டங்களை எடுத்து தமது ஆட்டத்தை இடைநிறுத்திக்கொண்டு இந்திய அணியைத் துடுப்பெடுத்தாட அழைத்தது.

444 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்குடன் தனது இரண்டாம் இன்னிங்சிற்காக துடுப்பாடிய இந்திய அணியை 234 ஓட்டங்களுடன் சுருட்டி 209 ஓட்டங்களால் வெற்றியை தமதாக்கி கிண்ணத்தை கைப்பற்றியது அவுஸ்திரேலிய அணி.

போட்டியின் ஆட்டநாயகனாக முதலாவது இன்னிங்சில் அதிரடியாக துடுப்பெடுத்தாடி 174 பந்துகளில் 163 ஓட்டங்களை பெற்ற டிராவிஸ் ஹெட் தெரிவு செய்யப்பட்டார்.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply