39 ஆண்டுகளின் பின் சாதனை படைத்த அவுஸ்திரேலியா! – தொடர்ந்தும் முதலிடத்தில் நீடிக்கும் அஸ்வின்

உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் நிறைவடைந்த நிலையில் டெஸ்ட் வீரர்களுக்கான தரவரிசையை ஐசிசி வெளியிட்டுள்ளது.

இதில் துடுப்பாட்ட வீரர்களுக்கான தரவரிசையில் முதல் மூன்று இடங்களையும் பெற்று அவுஸ்திரேலியா சாதனை படைத்துள்ளது.

இந்தியாவுக்கு எதிரான உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் அபாரமாக விளையாடிய டிராவிஸ் ஹெட் 3 ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளதுடன் அதே போட்டியில் சதம் விளாசிய ஸ்டீவ் ஸ்மித் தொடர்ந்தும் 2 ஆவது இடத்தில் உள்ளார். இவர்களுடன் மாரன்ஸ் லபுசேன் 903 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளார்.

இந்நிலையில், 39 ஆண்டுகளுக்கு பிறகு ஒரே அணியைச் சேர்ந்த மூன்று துடுப்பாட்ட வீரர்கள் முதல் மூன்று இடங்களைப் பிடித்து அவுஸ்திரேலியா சாதனை படைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதி போட்டியில் விளையாடாவிட்டாலும் பந்து வீச்சாளர்களுக்கான தரவரிசையில் 860 புள்ளிகளுடன் ரவிச்சந்திரன் அஸ்வின் தொடர்ந்தும் முதலிடத்தில் உள்ளார். மற்றும் இந்திய அணி வீரர் ஜஸ்பிரீத் பும்ரா 2 இடங்கள் சறுக்கி 8-ஆவது இடத்துக்கு வந்துள்ளாா்.

மேலும், சகலதுறை வீரர்களுக்கான தரவரிசையில் இந்திய அணியின் ரவீந்திர ஜடேஜா மற்றும் ரவிச்சந்திரன் அஸ்வின் முதல் இரண்டு இடங்களிலும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply