அஸ்வெசும நலத்திட்ட உதவிகள் திட்டத்தில் 190,000 முறையீடுகள்

அஸ்வெசும நலன்புரி உதவித் திட்டத்தின் பயனாளிகள் பட்டியல் தொடர்பில் இதுவரை 190,000 முறையீடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்தார்.

இதன்படி, இதுவரை 188,794 முறையீடுகளும் 3,304 ஆட்சேபனைகளும் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும், மேலதிக விசாரணைகளுக்கு, பொது மக்கள், வார நாட்களில் காலை 8.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை செயற்படும் 1924 என்ற அவசர தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்ள முடியும் என்றும் சேமசிங்க மேலும் தெரிவித்தார்.

‘அஸ்வெசும’ சமூகப் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் மக்கள் மேன்முறையீடுகள் மற்றும் ஆட்சேபனைகளை நாடளாவிய ரீதியில் உள்ள பிரதேச செயலகங்களில் தனிப்பட்ட முறையில் கையளிப்பதற்காக சம்பந்தப்பட்ட அனைத்து அதிகாரிகளுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாக ஜூன் 25 அன்று இராஜாங்க அமைச்சர் அறிவித்தார்.

அஸ்வெசும சமூக நலத் திட்டத்தின் இறுதிப் பயனாளிகள் பட்டியல் இன்னும் வெளியிடப்படவில்லை எனவும் பெறப்பட்ட மேல்முறையீடுகள் மற்றும் ஆட்சேபனைகளை மதிப்பீடு செய்த பின்னர் அரசாங்க அதிபர்களும்,  உதவி அரசாங்க அதிபர்களும் இறுதிப் பயனாளிகளின் பட்டியலை வெளியிடுவார்கள் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் அநீதி கண்டறியப்பட்டால், நலன்புரி பலன்கள் வாரியம் தலையிடும் என்று ஜூன் 24 திகதியன்று தனது டுவிட்டர்  பக்கத்தில் சேமசிங்க பதிவிட்டிருந்தார்.

இதற்கிடையில், ஜூன் 25 அன்று, ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு, அஸ்வெசும திட்டம் தொடர்பில், அரசாங்கம் உன்னிப்பாக கவனம் செலுத்துகிறது எனத் தெரிவித்தது.

எவ்வாறாயினும், உரியவர்களை தெரிவு செய்வதில் ஏதேனும் குறைபாடுகள் காணப்பட்டால் உடனடியாக நிவர்த்தி செய்யப்படும் என உறுதியளித்த அரசாங்கம், எதிர்வரும் வாரத்தில் இது தொடர்பில் மாவட்ட செயலாளர்கள், பிரதேச செயலாளர்கள் மற்றும் ஏனைய கட்சிகளுடன் கலந்துரையாடுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply