இந்த ஆண்டு குறைந்தபட்சம் 300,000 இலங்கையர்கள் தங்கள் நெருக்கடியால் இலங்கையிலிருந்து வெளிநாட்டு வேலைகளுக்காக வெளியேறியுள்ளதாகவும், அவர்களில் பெரும்பாலோர் அரேபிய நாடுகளை வேலைக்காக தேர்வு செய்கிறார்கள் எனவும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் கடந்த திங்களன்று தெரிவித்துள்ளது.
இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து ஒரு லட்சத்து 52 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இலங்கைத் தொழிலாளர்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாகவும், அவர்களில் 1 லட்சத்து 12 ஆயிரத்துக்கும் அதிகமானோர் சவூதி அரேபியாவையும், அதைத் தொடர்ந்து குவைத், கத்தார் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய நாடுகளையும் தேர்வு செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
”2023 ஆம் ஆண்டிற்கான மொத்த வெளிச் செல்லுகை 3 லட்சத்தை எட்டும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்” என இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் பிரதிப் பொது முகாமையாளர் காமினி செனரத் யாப்பா ஊடகமொன்றுக்குத் தெரிவித்தார்.
பாரம்பரிய தொழிலாளர் இணைப்புகள் மற்றும் உயர் சம்பளக் கொடுப்பனவுகள் காரணமாக மத்திய கிழக்கு நாடுகள் அவர்களின் விருப்பமான இடமாக உள்ளது எனவும், இது பிராந்தியத்துக்கு பணம் அனுப்பும் முக்கிய ஆதாரமாக விளங்குகிறது எனவும் அவர் தெரிவித்தார்.
தற்போது 1 மில்லியனுக்கும் அதிகமான இலங்கை வெளிநாட்டவர்கள் – அல்லது நாட்டின் வெளிநாட்டு பணியாளர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் -சவுதி அரேபிய நாடுகளில் பணிபுரிகின்றனர்.
“எங்கள் முகவர்களில் பெரும்பாலோர் மத்திய கிழக்கு சந்தையை இலக்காகக் கொண்டுள்ளனர்” எனவும், அங்கு எளிதான அணுகல் மற்றும் வேலைகள் கிடைக்கின்றன எனவும், அவர்களின் பொருளாதாரத்தை மேம்படுத்த மக்கள் தேவைப்படுகிறார்கள் எனவும் அவர் தெரிவித்தார்.
இலங்கையர்களின் சிறந்த இலக்கு சவுதி அரேபியா ஆகும், இது பெப்ரவரியில் இலங்கையுடன் திறன் சரிபார்ப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது, இது இலங்கையிலிருந்து திறமையான பணியாளர்களின் ஆட்சேர்ப்பு செயன்முறையை எளிதாக்குகிறது. இந்த ஒப்பந்தம் 23 தொழில்களை உள்ளடக்கியுள்ளதோடு, சவூதி முதலாளிகள் இலங்கையின் மூன்றாம் நிலை மற்றும் தொழிற்கல்வி ஆணைக்குழுவினால் வழங்கப்பட்ட அங்கீகாரங்களை ஏற்றுக்கொள்கின்றனர்.
அங்கு பல துறைகள் உள்ளன எனவும், நீங்கள் தகுதியுடையவராக இருந்தால், நீங்கள் ஒரு திறமையான தொழிலாளியாக இருந்தால், உங்களுக்கு அங்கு வாய்ப்புகள் உள்ளன என அவர் தெரிவித்தார்.
கடந்த ஆண்டு முதல், மோசமான நிதி நெருக்கடியின் பிடியில் இருக்கும் இலங்கை நாட்டிற்கு, வெளிநாட்டுப் பணியாளர்கள் பணம் அனுப்புவதற்கான முக்கிய ஆதாரமாக உள்ளனர்.
மே மாதம் வரை இலங்கையர்கள் 2.3 பில்லியன் டொலர்களை சொந்த நாட்டுக்கு அனுப்பியுள்ள நிலையில், கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு வரத்துகள் 3.8 பில்லியன் டொலர்களை விட அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆனால் அவர்கள் வெளிநாட்டில் தங்குவது டொலர்களுக்காக மட்டுமல்ல எனவும் அவர்கள் பெறும் அறிவுக்காகவும் கூட என அவர் தெரிவித்தார்.
”அவர்கள் நாணயத்தை மட்டுமல்ல, அனுபவத்தையும் கொண்டு வருகிறார்கள்” என்று யாப்பா தெரிவித்தார். “அவர்கள் நிறைய அறிவுடன் திரும்பி வருவதால் இது நிச்சயமாக எங்கள் பொருளாதாரத்திற்கு ஆதரவை அளிக்கிறது.” என்றார்.
