முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி விவகாரத்துக்கு நீதி கோரி வடக்கு கிழக்கில் இன்றைய தினம் கதவடைப்பு போராட்டத்திற்கு வடக்கு கிழக்கின் எட்டு மாவட்டங்களின் வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகளினால் அழைப்பு விடுக்கப்பட்டிருருந்தது.
வடக்கு கிழக்கு பகுதிகளில் கண்டுபிடிக்கப்பட்ட மனிதப் புதைகுழி தொடர்பில் நீதியான விசாரணை கோரியும் குறிப்பாக முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட மனித புதைகுழி விசாரணையில் சர்வதேச நிபுணர்களும் உள்வாங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையின் அடிப்படையிலுமே வடக்கு கிழக்கு மாகாணங்களில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை பூரண ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், இன்றையை கதவடைப்பு போராட்டத்திற்கு வடக்கு கிழக்கு மக்களின் ஒருமித்த ஆதரவு இல்லாமையை அவதானிக்க முடிகின்றது.
வடக்கு கிழக்கின் அநேகமான பகுதிகளில் வர்த்தக நிலையங்கள் இயங்கிய வண்ணமே காணப்பட்டன. தமக்கு வர்த்தக நிலையங்களை மூட வர்த்தக சங்கம் உரிய முறையில் கோரிக்கை விடவில்லை என வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர்.
அத்துடன் பெரும்பாலான தனியார் போக்குவரத்து சேவைகளும் இடம்பெற்ற வண்ணம் காணப்படுகின்றன. முச்சக்கர வண்டிகளும் வழக்கம் போல சேவையில் ஈடுபடுவதை காணக்கூடியதாக உள்ளது.
யாழ்ப்பாணம், கிளிநொச்சி, வவுனியா, மன்னாரிலுள்ள பிரதான வர்த்தகர் சங்கங்கள் எந்த முடிவையும் அறிவிக்க மாட்டோம் என தெரிவித்தன.
அத்துடன், இன்றைய கதவடைப்பை ஆதரிப்பதில்லையென வடக்கு கிழக்கின் பிரதான நகரங்களிலுள்ள அனேக வர்த்தகர், முச்சக்கர வண்டி சாரதிகள், அழகக சங்கங்கள் தீர்மானித்துள்ளன.
இதேவேளை, கதைவடைப்பு போராட்டத்திற்கு முறையான அழைப்பு விடுக்கப்படாமையே இன்றைய போராட்டம் ஒருமித்த ஆதரவு இல்லாமல் காணப்படுகிறதாக பலர் கருத்த தெரிவித்துள்ளார்.
தமிழ் மக்களின் போராட்ட முறைமையை தமிழ் மக்களே குறைமதிப்பிடுகிறார்கள் என்றும் கூட்டாக செயற்பட வேண்டிய ஒரு காலகட்டத்தில் பிரிந்து செயற்படுகின்றார்கள் எனவும் பலர் விமர்சித்து வருகின்றனர்.
எவ்வாறாயினும், இன்று வடக்கு கிழக்கின் பல பகுதிகளில் மக்கள் ஹர்த்தாலுக்கு ஆதரவை வழங்கி வருகின்றனர்.
அத்தியாவசிய சேவைகளை தவிர்ந்த அனைத்து தனியார் சேவைகளும் இன்றைய தினம் இயங்கவில்லை. பெரும்பாலான வர்த்தக நிலையங்களும் மூடப்பட்ட நிலையில் காணப்படுகின்றன.
மேலும் தனியார் போக்குவரத்துச் சேவைகள் இடம் பெறவில்லை. அதே நேரம் பாடசாலைகளுக்கு மாணவர்களின் வருகை மிக குறைவாக காணப்பட்டமையும் அவதானிக்க முடிகின்றது.
குறிப்பாக மன்னர் மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்கள் முற்றாக முடங்கி காணப்படுகின்றன.
யாழ்ப்பாணத்திலும் ஹர்தாலுக்கு பல்வேறுபட்ட தொழிற்சங்கங்கள் மற்றும் யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் என பல்வேறு தரப்பினரும் தமது ஆதரவை வழங்கியுள்ளனர்.
இந்நிலையில் சாவகச்சேரி நகர வர்த்தக நிலையங்கள், பொதுச்சந்தைகள் அனைத்தும் முற்றாக மூடி ஹர்த்தாலுக்கு பூரண ஆதரவு வழங்கப்பட்டமையை அவதானிக்க முடிந்தது.
