உள்ளூர் கோழி இறைச்சி விலையை குறைக்க உற்பத்தியாளர்கள் இணக்கம்

ஒரு கிலோ இறைச்சிக்கோழியின் விலையை குறைப்பதற்கு உள்ளூர் கோழிப்பண்ணை உற்பத்தியாளர்கள் இணக்கம் தெரிவித்துள்ளதாக விவசாய அமைச்சு அறிவித்துள்ளது.

இதன்படி, கிலோகிராம் ஒன்றின் விலையை 100 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், உணவு கைத்தொழில் நோக்கங்களுக்காக கோழி இறைச்சியை இறக்குமதி செய்வதற்கு ஜனாதிபதி அனுமதியளித்துள்ளதாக வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ நேற்று தெரிவித்தார்.

சந்தையில் கோழிக்கறியின் விலை உயர்வினால் மக்கள் எதிர்நோக்கும் சிரமங்களைக் குறைக்கும் நோக்கில், வாழ்க்கைச் செலவு தொடர்பில் ஜனாதிபதி தலைமையில் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் போது இந்த தீர்மானம் எட்டப்பட்டதாக அமைச்சர் தெரிவித்தார்.

இந்த தீர்மானத்தின் மூலம் சந்தையில் இறைச்சிக் கோழியின் விலைகள் கட்டுப்படுத்தப்படாவிட்டால் எதிர்காலத்தில் நுகர்வுக்காக கோழியை இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

மேலும், எதிர்காலத்தில் உற்பத்தியை அதிகரிப்பதன் மூலம் நாட்டு மக்களுக்கு மலிவு விலையில் இறைச்சிக் கோழி மற்றும் முட்டைகளை வழங்குவதற்கான வேலைத்திட்டம் ஒன்றை தயாரிக்குமாறும் ஜனாதிபதி விக்கிரமசிங்க விவசாய அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

எவ்வாறாயினும், வளர்ப்பு பண்ணைகள் மூலம் அதிக கோழிக்குஞ்சுகளை உற்பத்தி செய்வதற்காக தாய்க் கோழிகளை இறக்குமதி செய்வதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறும் ஜனாதிபதி பணிப்புரை விடுத்திருந்தார்.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply