விமல் மீதான இலஞ்ச ஊழல் வழக்கு விசாரணை ஒத்திவைப்பு

இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் தமக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள ஊழல் வழக்கை பேணுவதற்கு எதிராக நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச முன்வைத்த பூர்வாங்க ஆட்சேபனைகள் தொடர்பான வாய்மூல சமர்ப்பணங்களை எதிர்வரும் ஒக்டோபர் 27 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று தீர்மானித்துள்ளது.

இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம், விமல் வீரவன்சவிற்கு எதிராக கடந்த 2009 மற்றும் 2015 க்கு இடைப்பட்ட காலப்பகுதிக்குள் அமைச்சராக கடமையாற்றிய போது ஆறு வருட காலப்பகுதிக்குள் 75 மில்லியன் ரூபாய் பணம் மற்றும் சொத்துக்களை சட்டவிரோதமான முறையில் கையகப்படுத்தியமை தொடர்பில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருந்தார்.

கடந்த 2009 ஆம் ஆண்டு ஜனவரி முதலாம் திகதி முதல் 2014 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 31 ஆம் திகதி வரையில் அறிவிக்கப்படாத சொத்துக்கள் மூலம் முன்னாள் அமைச்சர் இந்தக் குற்றத்தைச் செய்துள்ளதாக இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் குற்றம் சுமத்தியுள்ளார்.

விமல் வீரவங்ச அரச அதிகாரியல்ல, மக்கள் பிரதிநிதி என்பதனால் இலஞ்ச ஊழல் சட்டத்தின் கீழ் அவர் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களை தொடர்ந்தும் பேண முடியாது என தரப்பினர் குற்றம் சுமத்தியுள்ளனர்.

பூர்வாங்க ஆட்சேபனைகள் தொடர்பாக தற்காப்பு மற்றும் வழக்குத் தரப்பு இரண்டும் ஏற்கனவே எழுத்துப்பூர்வ சமர்ப்பிப்புகளை தாக்கல் செய்துள்ளன.

முன்னாள் அமைச்சருக்கு எதிராக 39 சம்பவங்களின் கீழ் 75 மில்லியன் ரூபா பண மற்றும் சொத்து கொடுக்கல் வாங்கல்களின் கீழ் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இலஞ்ச சட்டத்தின் 23 ஆம் பிரிவிற்கு முரணாக முன்னாள் அமைச்சர் சட்டவிரோதமான முறையில் 26 பண பரிவர்த்தனைகளை மேற்கொண்டதாகவும், வீடு ஒன்றை நிர்மாணித்ததாகவும், காணிகள் மற்றும் வாகனங்களை கொள்வனவு செய்ததாகவும் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் குற்றம் சுமத்தியுள்ளார்.

இலஞ்சம் மூலம் பெறப்பட்ட சொத்துக்கள் என சட்டத்தின் ஏற்பாட்டின் கீழ் கருதப்படும் இந்த சொத்துக்கள் வீரவன்சவுக்கு சொந்தமானதாக இலஞ்ச ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் மேலும் குற்றம் சுமத்தியுள்ளார்.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply