பிரபாகரனை போன்று கலைஞர் கருணாநிதியையும் நேசித்தேன் – வைகோ தெரிவிப்பு!

இந்தியா தமிழக தி.மு.க.வின் முன்னாள் தலைவர் கலைஞர் கருணாநிதியையும், தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனையும் தான் எப்போதும் சமமாகவே நேசித்ததாக மக்கள் திராவிட முன்னேற்ற கழக கட்சியின் பொது செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

மதுரையில் கட்சி உறுப்பினர்களை சந்தித்து பேசிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தமிழ் மக்களின் நலன் கருதி தி.மு.கவுடன் நட்பு கொண்டிருந்ததாக தெரிவித்துள்ள வைகோ, இலங்கை தமிழர்களின் உரிமைக்காக விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனுடன் நட்புகொண்டிருந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

தி.மு.க.வின் முன்னாள் தலைவர் கலைஞர் கருணாநிதியையும், தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனையும் தான் எப்போதும் சமமாகவே நேசித்ததாகவும் அதன் போது தெரிவித்துள்ளார்.

படகில் சென்று விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனை தான் சந்தித்தபோது, அந்த சந்திப்பிற்கும் கட்சிக்கும் எவ்வித தொடர்பும் இல்லையென தெரிவித்து தி.மு.க கட்சியினர் அறிக்கை வெளியிட்டனர் எனத் தெரிவித்துள்ளார்.

அதன்பின் தன்னை கட்டாயப்படுத்தி பிரபாகரன் இந்தியாவிற்கு அனுப்பினார் எனக் குறிப்பிட்டுள்ளார். அப்போது ஒரு கடிதம் ஒன்றை கலைஞருக்கு கொடுக்குமாறு கொடுத்துவிட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்தியாவிற்கு சென்று கடிதத்தை கலைஞரிடம் கொடுத்த போது என்ன தான் பற்று இருந்தாலும் உயிரை வெறுத்து சென்றிருக்கக் கூடாது என கலைஞர் தன்னிடம் கூறியதாகவும் தெரிவித்துள்ளார்.

விடுதலைப்புலிகளை ஆதரித்ததால் ஒருவருடம் சிறையில் அடைக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார். இன்னும் ஒரு வருடத்தில் அந்த வழக்கு விசாரணைக்கு வருகிறது. அப்படியே தண்டனை வழங்கப்பட்டாலும் ஏற்க தயாராக உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளை, தி.மு.கவில் இருந்து தான் நீக்கப்பட்ட போது, தொண்டர்கள் ஐந்து பேர் தீக்குளித்ததாகவும் சுட்டிக்காட்டியுள்ளார். பின்னர் தொண்டர்களின் விருப்பத்திற்கு அமைய ம.தி.மு.க உருவாக்கப்பட்டதாகவும் வைகோ தெரிவித்துள்ளார்.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply