மழைக்காலத்தில் டெங்கு பரவுவதைத் தடுக்க முக்கிய நடவடிக்கை!

தற்போது நிலவும் சீரற்ற காலநிலையை கருத்தில் கொண்டு டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவது தொடர்பில் கவலை வெளியிட்டுள்ள ஜனாதிபதியின் தேசிய பாதுகாப்பு தொடர்பான சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதியின் தலைமை அதிகாரியுமான சாகல ரத்னாயக்க, அதிகரித்து வரும் நிலைமையை நிவர்த்தி செய்வதற்கான நடவடிக்கைகளை உடனடியாக அமுல்படுத்துமாறு அனைத்து திணைக்களங்களையும் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பில் சுகாதார இராஜாங்க அமைச்சர் வைத்தியர் சீதா அரம்பேபொல மற்றும் சாகல ரத்நாயக்க ஆகியோர் தலைமையில் நேற்றையதினம் ஜனாதிபதி செயலகத்தில் கூட்டமொன்று இடம்பெற்றது.

இதன்போது சுகாதார அமைச்சின் தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவுக்கு, சாகல ரத்னாயக்க அறிவுறுத்தல்களை வழங்கினார்.

கொழும்பு, கம்பஹா, கண்டி மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகக் கவலை தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், அரசு நிறுவனங்கள், படகுத் தளங்கள் மற்றும் பள்ளிகள் போன்ற பொது இடங்களிலும் டெங்குக் கிருமியின் இனப்பெருக்கம் அதிகமாக இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்குப் பதிலளித்த ரத்நாயக்க, நிலைமையைக் கட்டுப்படுத்துவதற்கு உடனடி நடவடிக்கை எடுக்குமாறு இலங்கை காவல்துறைக்கு அறிவுறுத்தினார்.

மேலும், நாடளாவிய ரீதியில் விரிவான விழிப்புணர்வு நிகழ்ச்சித்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு இலங்கை காவல்துறை மற்றும் சுகாதார வைத்திய அதிகாரிகளின் அலுவலகங்களுக்கு இடையில் கூட்டு முயற்சியை மேற்கொள்ளவும் ரத்நாயக்க இதன்போது ஆலோசனை வழங்கினார்.

இந்த முயற்சிகளின் முன்னேற்றத்தை மதிப்பிடுவதற்காக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவுடனான தொடர் கூட்டம் எதிர்வரும் 11ஆம் திகதி  திட்டமிடப்பட்டுள்ளது.

இதேவேளை,பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் நாயகம் கமல் குணரத்ன, பாதுகாப்பு அதிகாரிகளின் பிரதானி ஜெனரல் சவேந்திர சில்வா, பதில் பொலிஸ் மா அதிபர் தேஷபந்து தென்னகோன் மற்றும் சுகாதார அமைச்சு, கல்வி அமைச்சு மற்றும் கொழும்பு மாநகர சபையின் சிரேஷ்ட அதிகாரிகள் என பலரும் குறித்த சந்திப்பில் கலந்துகொண்டனர்.

You May Also Like

About the Author: Chaithannya Dhanu

Leave a Reply