இத்தாலியில் வேலை வாங்கித் தருவதாக கூறி பணத்தை மோசடி செய்த குற்றச்சாட்டில் பெண் ஒருவர் உட்பட இருவரை கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர்.
இத்தாலியில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி இத்தாலி தூதரகத்திற்கு சேவைக்காக வரும் நபர்களிடம் வெளியாட்கள் மூலம் பணம் பெற்று மோசடியில் ஈடுபடுவதாக தெரியவந்ததை அடுத்து இது தொடர்பில் இத்தாலிய தூதரகம் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவின் அதிகாரிகள் மேற்கொண்ட விசாரணைகளுக்கமைய, சந்தேகநபர்கள் 26 லட்சம் ரூபாவை மோசடி செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
50 வயதுடைய பெண் ஒருவரும், 52 வயதுடைய ஆண் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அவர்கள் நாரஹேன்பிட்டி பகுதியைச் சேர்ந்தவர்கள் எனவும் பொலிஸார் கூறியுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பில் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
