கடலில் குழந்தை பிரசவித்த பெண்!

யாழ்ப்பாணம், நயினாதீவைச் சேர்ந்த பெண்ணொருவர் கடலில் குழந்தை பிரசவித்துள்ளார்.

நயினாதீவைச் சேர்ந்த பெண்ணுக்கு நேற்று திடீரென பிரசவ வலி ஏற்பட்டதையடுத்து நயினாதீவு பிரதேச வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார்.

அங்கிருந்து அவரை மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு மாற்றுமாறு வைத்தியர் பரிந்துரைத்தார். அதையடுத்து மேற்படி பெண்ணை யாழ். போதனா வைத்தியசாலைக்குக் கொண்டு செல்வதற்கு, அம்புலன்ஸ் படகு தற்போது சேவையில் ஈடுபடாததால், பொதுமக்கள் போக்குவரத்து படகில் அவரை ஏற்றி குறிகாட்டுவான் நோக்கி அழைத்து வந்தனர்.

அந்நிலையில், கடலில் படகு பயணித்துக்கொண்டிருந்தவேளை, பிரசவ வலி பெண்ணுக்கு அதிகரித்ததையடுத்து படகின் கீழ் தளத்தில் இருந்த ஆண்களை மேல் தளத்துக்கு அனுப்பி வைத்த பின்னர், படகில் பயணித்த பெண்களே பிரசவம் பார்த்தனர்.

படகு குறிகட்டுவான் இறங்குதுறையை வந்தடைந்ததும், அங்கு தயார் நிலையில் நின்ற புங்குடுதீவு வைத்தியசாலையின் அம்புலன்ஸ் வாகனத்தில் தாயையும் சேயையும், யாழ். போதனா வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்றனர்.

தற்போது தாயும் சேயும் நலமாக உள்ளனர் என்று வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

You May Also Like

About the Author: Chaithannya Dhanu

Leave a Reply