மக்களின் வாழ்வாதாரங்கள் அழிவுறும் நிலை – கண்டுகொள்ளாத காவல்துறை, அரச தரப்பினர்!

நெல்லிக்குளம் மலைப்பகுதி மக்கள் விசனம்

(ஹஸ்பர் ஏ ஹலீம்)

திருகோணமலை மாவட்டத்தின் மூதூர் கிழக்கு, சேனையூர் கிராம சேவகர் பிரிவில் உள்ள நெல்லிக்குளம் மலைத் தொடரில் கடந்த 8 ஆம் திகதி சனிக்கிழமை பாறை உடைப்பு இயந்திரத்துடன் பாறை உடைப்பு வேலைகளை ஆரம்பிக்க முயன்றபோது அப்பகுதி மக்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர்.

இதனால் உடைப்பு வேலைகள் நிறுத்தப்பட்டுள்ளன. ஆனால், உடைப்பு இயந்திரம் அப்பகுதியில் இருந்து இன்னும் அகற்றப்படவில்லை. இவ்விடயம் சம்மந்தமாக சேனையூர் கிராம அபிவிருத்தி சங்கத் தலைவர் காவல்துறையில் முறைப்பாடு செய்ததாகத் தெரிவித்தார்.
மறுநாள் ஞாயிற்றுக்கிழமை அப்பகுதியில் மக்கள் கூடி நின்றனர். அவர்கள் இந்த விடயம் குறித்துத் தெரிவிக்கையில்,

“நாட்டின் ஏனைய பிரதேசங்களின் அபிவிருத்திக்காக எமது வாழ்வாதரத்தினை அழித்தொழிக்கும் நடவடிக்கையினை உடன் நிறுத்த வேண்டும். வாழ்வாதாரத்தினை பாதிக்கும் வகையில் மலைகளை உடைப்பதற்கு அனுமதி வழக்கியது யார்?” என்ற கேள்வியையும் எமுப்பினர்.

சேனையூர் கிராம அபிவிருத்தி சங்கத் தலைவர் கருத்துத் தெரிவிக்கையில்,
நாளாந்தம் கூலித் தொழிலையும் நெற்செய்கை, கால் நடை வளர்ப்புப் போன்ற வாழ்வாதார முயற்சிகளை நம்பி வாழ்ந்து வரும் மக்கள்தான் இப்பகுதியில் இருக்கின்றனர். குளம், வயல், காடு போன்ற வளங்களையே இவர்கள் நம்பி வாழ்கின்றனர். மலையைச் சூழவுள்ள வயல்கள், மேய்ச்சல் தரை இயற்கைக் காட்டு வளம் என்பன கல்லுடைப்பால் அழிவுறும் அபாயம் ஏற்படும் என்றார்.

இம்மலையில் இந்து வழிபாட்டு அடையாளங்களும் கானப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

தொல்பொருள் என்ற போர்வையில் தனியார் காணி அபகரிப்புப் போன்றன வடக்குக் கிழக்கில் மாத்திரம் ஏன் இடம் பெறுகின்றன? வெடி பொருட்களைக் கொண்டே மலையைத் தகர்த்து, அதில் உள்ள கற் பாறைகளை எடுக்க முயற்சிக்கின்றனர். சட்ட ரீதியான அனுமதி என்றாலும் அரச திணைக்களங்களின் ஒட்டு மொத்த அனுமதியுடனேயே இப்படியான செயற்பாடுகளை மேற் கொள்ள முடியும் என்பது கவனிக்கத்தக்கது.

இப்பகுதியில் மக்களின் வாழ்வாதாரமாக விவசாயச் செய்கையானது குளங்களை நம்பி மேற்கொள்ளப்படுகிறது. கால் நடைகள் வளர்ப்பு இடம் பெறுகின்றது. இவ்வாறான நிலையில் இந்த மலைகளை உடைப்பதனால் பல சூழலியல் தாக்கங்கள், பல பாதக விளைவுகளை அது ஏற்படுத்தக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
புவிச்சரிதவியல் சுரங்கப்பணியகம், வனஜீவராசிகள் திணைக்களம், சுற்றாடல் அதிகார சபை, தொல்பொருள் திணைக்களம், பிரதேச செயலகம், காணித் திணைக்களம், விவசாய சம்மேளனம் உட்பட பல திணைக்களங்களின் அறிக்கைகள் சாதகமாகப் பெறப்பட்டதன் பின்புதான் இவ்வாறான வேலைகளுக்கு அனுமதிகளை முறையாகப் பெறலாம். ஆனால், அரசியல் அதிகாரம் படைத்த கொந்தராத்துக்காரர்கள் மக்களின் கருத்துக்களை செவிசாய்க்காது இது போன்ற விடயங்களில் ஈடுபடுவது கவலையளிக்கிறது.

எது எவ்வாறாக இருந்த போதிலும், 1979 ஆம் ஆண்டின் 15 ஆம் இலக்க குற்றவியல் நடைமுறைச் சட்டக் கோவை 81 கீழ், சமாதானக் குலைவை ஏற்படுத்தக் கூடிய செயல் ஒன்றைச் செய்த அடிப்படையில் சம்பூர் பொலிசார் அப்பாவிப் பொதுமக்கள் 10 பேரை செவ்வாய்க்கிழமை (11) கைது செய்தனர். பின்னர் அவர்களை பொலிஸ் பிணையில் விடுவித்தனர்.

விடுவிக்கப்பட்ட 10 பேரும் மூதூர் நீதிமன்ற நீதிமன்றில் புதன்கிழமை (12) மதியம் ஆஜர் ஆகினர். நீதிமன்றமானது இவர்கள் அனைவரையும் சொந்தப் பிணையில் விடுவித்ததோடு குறித்த பிரதேசத்தை இம் மாதம் 15 ஆம் திகதியன்று நீதவான் பார்வையிடுவார் என்றும் மன்றில் தெரிவிக்கப்பட்டது.

கைதான 10 பேர் சார்பாக சட்டத்தரணிகளான பு.முகுந்தன், ந.மோகன் ஆகியோர் மன்றில் பிரசன்னமாகியிருந்தனர்.

இதேவேளை இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் திருகோணமலை மாவட்டக் கிளைத் தலைவர் சண்முகம் குகதாசன் குறித்த பிரதேசத்துக்கு விஜயம் செய்து மக்களுடைய பிரச்சினைகள் தொடர்பில் கேட்டறிந்து கொண்டார்.

“பல வருட காலமாக இங்கு குடியிருந்து வருகிறோம். இங்கு பயிர்ச் செய்கை மூலமே வாழ்வாதாரத்தை மேற்கொண்டு சீவிக்கிறோம். அதற்குள் இம்மலையை உடைத்தால் நாங்களும் அழிந்து விடுவோம். மலை உடைப்புத் தொடர்பில் பொலிஸில் முறைப்பாடு செய்யச் சென்ற போதும் முறைப்பாட்டை ஏற்காமல், உரிய இடத்துக்கு வந்து அவர்களை வேலைகளைத் தொடரவிட்டு எங்களைக் கைது செய்தார்கள். எனவே, வாழ்வாதாரத்தை அழித்து நாசமாக்கி மலையை உடைக்க வேண்டாம்” என அப் பகுதியைச் சேர்ந்த குடும்பத் தலைவி ஒருவர் தனது ஆதங்கத்தைத் தெரிவித்தார்.

மக்கள் உரிமைகளை செவிமடுக்காது பொலிஸாரும் அடாவடியில் ஈடுபட்டதாகவும் மக்கள் தெரிவிக்கின்றனர். பொய்க் குற்றச்சாட்டை முன்வைத்து அப்பாவி மக்களைக் கைது செய்து சிறையில் அடைப்பதும் உரிமைகளை மீறும் செயலாகும். இவ்வாறாக சிறுபான்மை மக்கள் மீது அதிகாரத்தை வைத்து அவர்களை அடக்கி ஒடுக்க நினைப்பதும் அதிகாரத் துஷ்பிரயோகமாகவே கருதப்படுகிறது. அன்றாட ஜீவனோபாயத்தைக் கூட தங்களால் மேற்கொள்ள முடியாமல் இம் மக்கள் வருந்துகின்றனர். பாடசாலை செல்லும் மாணவர்கள், குழந்தைகளை வைத்துக்கொண்டு பெரும் பொருளாதார நெருக்கடிக்குள் வாழ்ந்து வரும் இந்த மக்களின் வாழ்வாதாரத்தை ஏன் அழிக்க நினைக்கிறார்கள்?

“மாரி காலம் தவிர்ந்த ஏனைய காலங்களில் இந்தக் குளத்தை நம்பியே விவசாயத்தில் ஈடுபடுகிறோம். 25க்கும் மேற்பட்ட குடும்பங்கள் இங்கே வாழ்கிறோம்” என அப் பகுதி விவசாயி ஒருவர் தெரிவித்தார்.

மலை உடைப்புக்குப் பயன்படுத்தும் வெடிபொருட்கள் மூலமாகவும் ஒலி மாசடைவு உட்பட பல பாதக விளைவுகள் ஏற்படக்கூடும். இதனால், அப்பகுதி மக்களே பாதிக்கப்படுவார்கள். விவசாயச் செய்கை, கால் நடை வளர்ப்பு, சுத்தமான நீரைப் பெற முடியாது குளங்கள் பாதிப்பு எனப் பல பிரச்சினைகளை அம்மக்கள் எதிர்நோக்க வேண்டி ஏற்படும்.

“காய்ந்த விறகுகளைக்கூட எடுக்க முடியாது என்று வனஜீவராசிகள் திணைக்களத்தினர் எங்களைத் தடுத்து நிறுத்துவர். ஆனால், மலையை உடைக்க அவர்களுக்கு அனுமதி கொடுப்பார்கள். பெரும் கஷ்டத்துக்கு மத்தியில் வாழ்ந்து வருகிறோம். அரசாங்கம் தான் மக்களை பாதுகாக்க வேண்டும். இதற்காக அரசாங்கம் உதவ வேண்டும்!” என குடியிருப்பாளர் ஒருவர் தெரிவித்தார்.

மக்களுக்கு ஒரு சட்டம் – மலையை உடைப்பவர்களுக்கு ஒரு சட்டமா? இப்படியான பாரபட்சமான செயற்பாடுகளால் சட்டத்தின் முன் யாவரும் சமம் என்ற வார்த்தைக்கே அர்த்தமற்றதாகிவிடுகிறது.

“இந்த மலையில் 200 வருடங்கள் பழமை வாய்ந்த கோயில் ஒன்று உள்ளது. இங்குள்ள வணக்க ஸ்தலங்களையும் சேர்த்து உடைக்க முற்படுகிறார்கள். வாழ்வாதாரத்தை நோக்காகக் கொண்டு இந்த இயற்கையை நம்பி செயற்படும் எங்களை, வன்முறையைத் தூண்டியதாக பொய்யான குற்றச்சாட்டுக்களை முன்வைத்து கைது செய்தார்கள்.”

“பல்வேறு இக்கட்டான சூழ் நிலையில் வாழும் மக்களை அச்சுறுத்தி செயற்படுவதும், வாழ்வாதாரத்தை அழிப்பதும் மக்கள் மீது திணிக்கும் துஷ்பிரயோகங்களாகவே உள்ளதன. அப்பாவி மக்களுக்கான வாழ்வாதாரத்தை அமைத்துக் கொடுப்பதும் அவர்களுக்கு பொருளாதார ரீதியான முன்னேற்றங்களைக் கொண்டு சேர்ப்பதும் அரசாங்கம் மீதுள்ள கடமையாகும்.”

மூதூர் நீதிமன்றத்தில் இடம் பெற்ற வழக்கின் பின்னர் ஊடகங்களுக்கு மக்கள் இவ்வாறு கருத்துத் தெரிவித்தனர்

இந்த மலையை உடைப்பதால் பல்வேறு இன்னல்களை இங்குள்ள மக்கள் எதிர்நோக்க வேண்டி ஏற்படும்!

“எங்களது வாழ்வாதாரம் இங்கு தான் உள்ளது. விவசாயச் செய்கை, கால் நடை வளர்ப்பு போன்றன இதன் மூலம் பாதிக்கப்படலாம். அரசாங்கம் மக்களூக்காகத் தான் இருக்கிறது. மக்கள் விடயத்தில் அது கவனம் செலுத்த வேண்டும்!” என்றும் வலியுறுத்தினர்.

மக்களுக்குப் பாதுகாப்புத் தருகின்ற விடயங்களையும் சுமுகமான நிலமைகளையும் உருவாக்க உரிய அரச உயரதிகாரிகள் முன்வர வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

You May Also Like

About the Author: digital

Leave a Reply