யாழ் போதனா வைத்தியசாலையில் மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த பருத்தித்துறையைச் சேர்ந்த நபர் ஒருவர் நேற்று புதன்கிழமை உயிரிழந்துள்ளார்.
இவ்வாறு உயிரிழந்தவர் பருத்தித்துறையைச் சேர்ந்த ஆனந்தகுமார் (வயது47) என்பவராவார்.
மேற்படி நபர், மர்மக் காய்ச்சல் பாதிப்புக்குள்ளாகி பருத்தித்துறை – மந்திகை ஆதார வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டிருந்த நிலையிலேயே சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த நபரின் மாதிரிகள் கொழும்புக்கு அனுப்பப்பட்டுள்ள நிலையில், அறிக்கைகள் கிடைத்த பின்னரே இறப்புக்கான காரணம் என்னவென்பது தொடர்பில் உறுதியாகத் தெரியவரும் என கூறப்படுகின்றது.
வடக்கு மாகாணத்தில் தற்போது மர்ம காய்ச்சல் பரவி வரும் நிலையில் இதுவரை இம்மர்மக் காய்ச்சலுக்குப் பலியானவர்களின் எண்ணிக்கை 7 ஆக அதிகரித்துள்ளது.
அத்துடன் மர்மக் காய்ச்சல் அறிகுறிகளுடனும், சடுதியான சுகவீனத்துடனும் வடக்கு வைத்தியசாலைகளை நாடுவோரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
பருத்தித்துறை – மந்திகை ஆதார வைத்தியசாலையில் மட்டும் இதுவரை 40 பேர் மர்மக் காய்ச்சல் காரணமாக சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவரது உடல்நிலை தொடர்பிலும் தீவிரமான கண்காணிப்புக்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சிலரின் உடல்நிலை சடுதியாகப் பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து அவர்கள் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
இந்நிலை தொடர்பாக சுகாதாரத்துறையினர் அறிவுறுத்துகையில், “அண்மையில் பெய்த கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப் பேரிடரால் எலிக் காய்ச்சல் பரவக்கூடிய சாத்தியங்கள் உள்ளன. அத்துடன் வேறுசில விலங்குகளின் மலத்தொற்றாலும் இவ்வாறான நோய்நிலை ஏற்படும் சாத்தியங்கள் உள்ளன. எனவே பொதுமக்கள் தமது சுகாதாரம், குடி நீர், ஆரோக்கியம் என்பவற்றில் மிகுந்த அவதானத்துடன் இருக்க வேண்டும் என்றும் திடீர் காய்ச்சல் மற்றும் சடுதியான சுகவீனம் ஏற்பட்டால் உடனடியாக வைத்தியசாலையை நாட வேண்டும்.” என்றும் கூறினர்.
