
இலங்கையில் எலிக்காய்ச்சல் காரணமாக இந்த வருடத்தில் இதுவரை 10000 இற்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தொற்று நோய்த் தடுப்புப் பிரிவின் விசேட வைத்தியர் குமுது வீரக்கோன் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் தெரிவிக்கையில் கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இந்த வருடம் எலிக்காய்ச்சல் நோயாளர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது என்று கூறினார்.
இதேவேளை, வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன், யாழ்ப்பாணம் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரனுக்கு ஆலோசனை ஒன்றையும் வழங்கியுள்ளார். அதாவது, வடக்கு மாகாணத்தில் அடையாளம் காணப்படாத காய்ச்சல் காரணமாக நேற்று வரையில் 7 பேர் உயிரிழந்துள்ள நிலையில் அதனைக் கட்டுப்படுத்துவதற்கு எடுக்கப்படும் நடவடிக்கைகளை விரைவுபடுத்துவதற்காக தேவையேற்படின் மாவட்டத்தின் ஏனைய சுகாதார மருத்துவ அதிகாரிகள் பிரிவுகளிலிருந்து ஆளணியினரைப் பெற்றுப் பயன்படுத்துமாறு கூறியுள்ளார்.
இதுவரை யாழ்ப்பாண மாவட்டத்தில் 6 பேரும், முல்லைத்தீவு மாவட்டத்தில் ஒருவரும் உயிரிழந்துள்ள நிலையில் இதனைக் கட்டுப்படுத்துவதற்கு சுகாதாரத்துறையினர் எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்து பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளருடன் நேற்றைய தினம் (புதன்கிழமை) ஆளுநர் தொலைபேசியில் உரையாடியமை குறிப்பிடத்தக்கது.